நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்து உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், டைரக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு முக்கிய காரணம், இந்த படத்தில் நடித்த ஏலியன் கதாபாத்திரம் படத்தில் நடித்தவர்களுடனும் ஒட்டவில்லை. அதனால் படம் பார்த்த ரசிகர்களுக்கும் ஏலியன் உடன் தொடர்பு ஏற்படவில்லை. ஏலியனுக்கும், ரசிகர்களுக்கும் உணர்வு ரீதியான ஒரு இணைப்பை, பாசப் பிணைப்பை உருவாக்கி இருந்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை படத்தை வெற்றிப்படமாக மாற்றியிருப்பர்.
படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தியேட்டர் தியேட்டராக சென்று ரசிகர்களை சந்தித்தாவது படத்தை ஓரளவுக்கு ஓடவைத்து விடலாம் என்று சிவகார்த்திகேயன் ஒரு திட்டம் போட்டார். பல தியேட்டர்களில் ஆபரேட்டரே அயலான் படம் பார்க்க பிடிக்காமல் கேபினை விட்டு வெளியே வந்து டென்சனாக நிற்பதாக தகவல் கேள்விபட்டு, அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டார் சிவகார்த்திகேயன்.
அதே நேரத்தில், வன்முறை காட்சிகளுக்கு ஏ சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் போராட்டத்தில், கிளைமாக்ஸ் வன்முறை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு யுஏ சான்றிதழ் பெற்ற கேப்டன் மில்லர் வசூலை குவித்து விட்டது. இந்த படமும் மொக்கை தான் என்றாலும், வேறு படங்களே இல்லாததும், வந்த மிஷன் சாப்டர் 1 என்ற நல்ல படமும், போதிய தியேட்டர்களில் வெளியாகாதது, கேப்டன் மில்லர் வசூலுக்கு உதவி விட்டது.
இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷல் நிறுவனத்தின் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் இந்த படத்தின் கதை, ராணுவத்தை பின்னணியாக கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் பிப்ரவரி 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். அன்று இந்த படத்தின் டைட்டிலையும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் தலைப்பாக போர்க்களத்தில் சிங்கம் உள்ளிட்ட 3 தலைப்புகளை, படக்குழு தரப்பில் கமல்ஹாசன் வசம் ஒப்படைத்துள்ளனர். அந்த 3ல் ஒன்றை தேர்வு செய்து படத்தின் டைட்டிலாக வரும் 17ம் தேதி, கமல் அறிவிக்க இருக்கிறார்.





