தமிழ் சினிமாவில் சில படங்கள், சில நடிகர்களின் அடையாளமாகி விடுகின்றன. அந்த வகையில் ரஜினிக்கு பாட்ஷா, விஜயகாந்த்க்கு கேப்டன் பிரபாகரன், சத்யராஜூக்கு அமைதிப்படை, சரத்குமாருக்கு நாட்டாமை, சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், எம்ஜிஆருக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று சொல்லலாம்.
அதுபோல், நடிகர் கமலுக்கு அவரது திரையுலக பயணத்தில் பல படங்கள் முக்கியமானதாக இருந்தாலும், அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் நாயகன். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ம் ஆண்டில், அதாவது 36 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம். மும்பை தாராவியில் வாழ்ந்த வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திய இந்த படத்தில், கமல் வேலு நாயக்கராக மிக சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் கமலுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பி.சி ஸ்ரீராமுக்கும், சிறந்த கலை இயக்குநருக்கான தேசிய விருதை தோட்டாதரணிக்கும் நாயகன் படம் பெற்றுத் தந்தது. ஒரே படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது நாயகன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சரண்யா இந்த படத்தில்தான் அறிமுகமானார். டெல்லிகணேஷ், நாசர், நிழல்கள் ரவி, ஜனகராஜ், விஜயன் நடித்திருந்த இந்த படம், அந்த காலத்தில் பிக்சர் பிலிம்ரோலில் எடுக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் படத்தின் ஒலி, ஒளி அமைப்பு மற்றும் வண்ணங்கள் கூடுதலாக்கப்பட்டு வரும் நவம்பர் 3ம் தேதி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திரைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் 140, கேரளா 60, கர்நாடகா 50, பிற பகுதிகளில் 30 என மொத்தம் 280 தியேட்டர்களில் , வரும் நவம்பர் 3ம் தேதி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவான நாயகன் படம் ரி ரிலீஸ் ஆகிறது. கமல் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தை காண, வரவேற்க கமல் ரசிகர்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன், வேட்டையாடு விளையாடு கமல் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடி, நல்ல லாபத்தை கொடுத்தது. அதே போல் நாயகன் படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. கமல் பிறந்த நாள் வாரத்தில் இந்த படம் தியேட்டர்களுக்கு வருவதால், நாயகனுடன் பிறந்த நாளை கொண்டாடுவதில் கமல் ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் சந்தோஷம்தான்.





