சூர்யா நடித்து வரும் “கங்குவா” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம் வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வருவதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. சிறுத்தை சிவா தனது கடுமையான உழைப்பால் இத்திரைப்படத்தை படமாக்கி வருகிறார். அது மட்டுமல்லாது இத்திரைப்படத்திற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் மிக உக்கிரமாக உழைத்து வருகின்றனர்.

“கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இத்திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திசா படானி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு நேரம் சில காட்சிகளை படமாக்க தயார் செய்துகொண்டிருந்தார்களாம்.

“கங்குவா” திரைப்படத்தின் வரலாற்றுப் பகுதியான பழங்குடி மக்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகள்தான் அவை. ஆதலால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் மேல் சட்டை அணியக்கூடாது. பழங்கால வழக்கப்படி வெறும் உடம்பில் நடிக்க வேண்டும்.
கொடைக்கானலில் பகல் நேரமே குளிராகத்தான் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில் மலைப்பகுதி என்றால் நாம் சொல்லவே தேவையில்லை. குளிரில் மக்கள் உறைந்துப் போய்விடுவார்கள். இந்த குளிர் காரணமாகவே அந்த காட்சியில் ஜூனியர் நடிகர்களால் நடிக்க முடியவில்லையாம். இந்த அடர்ந்த குளிரில் சட்டை இல்லாமல் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். ஆதலால் அந்த காட்சியை அங்கே படமாக்கவில்லையாம். அதன் பின் தற்போது அந்த காட்சிக்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போட்டிருக்கிறார்களாம்.





