பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வித்தியாசமான தரமான குறும்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தனது முதல் படமான பீட்சாவிலும் தன்னுடைய தரமான மேக்கிங்கை செய்து அதகளம் பண்ணினார். குறிப்பாக லியோ படத்தின் ஃபேக் பிளாஷ்பேக் குறித்து இப்போது பேசப்பட்ட பீட்சா படத்திலேயே அதை வைத்து வெற்றிக்கண்டவரும் கார்த்திக் சுப்புராஜ்.
பேய் பட ஜானரில் புதிய விதமாக வந்து பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். அதில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, அம்பிகா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மதுரை கேங்ஸ்டர் ஜானரில் தனது வித்தியாசமான அணுகுமுறையில் கொடுத்ததால் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. அதிலும் பாபி சிம்ஹாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படமும் சூப்பர் ஹிட்டானது. அதில் தான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகன் என்பதை ஃப்ரேம் பை ஃப்ரேம் நிரூபித்திருப்பார். தற்போது அவர் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஜிகர்தண்டா முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்படம் பீரியட் கால படமாக உருவாகியிருக்கிறது. படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக கறுப்பு ஹீரோ என்ற வசனம் பட்டையை கிளப்புகிறது. அதேபோல் மாமதுர பாடலும் அட்டகாசமாக இருக்கிறது.
படமானது நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்து பேசுகையில், “1975ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான் இந்தப் படத்தின் கதைக்களம் இருக்கும். ரஜினியை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இப்படத்தின் கதையை எழுதினேன். ரஜினிகாந்த் ஹீரோவாக் அறிமுகமான அந்த ஆண்டைத்தான் லாரன்ஸ் கேரக்டருக்கு பயன்படுத்திக்கொண்டேன்.
அந்த விஷயம் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எழுத உறுதுணையாக இருந்தது. இது கதையின் முக்கிய புள்ளியாகவும் இருக்கும்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.





