கடந்த ஆண்டில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வெளியான படம் சிறை. மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை பெற்றது. மொத்தம் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 32 கோடி ரூபாய்க்கும் மேல் தியேட்டர்களில் வசூலை அள்ளியது.
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இந்த படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியிருந்தார். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாகவும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாரின் மகன் அக்ஷய் குமார் படத்தில் கைதி கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இப்போது ஜீ 5 ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. திரும்ப திரும்ப இந்த படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இஸ்லாமியர் குறித்த கண்ணோட்டம் குறித்தும் போலீஸ் அதிகாரிகளின் சமூக பார்வை குறித்தும் பேசும் இந்த கதைக்களம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது.
சிறை படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அறிமுக நடிகர் அக்சய் குமாருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. நிறைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்ண அவரது அப்பா தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமாரை அணுகி வருகின்றனர். ஆனால் அவர்கள் யாருக்குமே லலித்குமார் ஓகே சொல்லாமல் முடியாது என மறுத்து வருகிறார்.
என் மகனுக்கு நல்ல ஒரு ஆரம்பம் கிடைத்திருக்கிறது. பெரிய பட்ஜெட் பெரிய இயக்குனர்கள் படம் என்பதை விட நல்ல கதையம்சம் கொண்ட படங்களே இப்போது முக்கியம். அதுதான் நிலையான வளர்ச்சியை என் மகனுக்கு தரும். அதனால் என் மகன் அடுத்தடுத்து நடிக்கப் போகும் 5 படங்களை நானே தயாரிக்கப் போகிறேன்.
ஒவ்வொரு படத்துக்கும் அதிக பட்சம் ரூ. 10 கோடி தான் பட்ஜெட். நல்ல கதையம்சம்தான் படத்தின் கருவாக இருக்க வேண்டும். அதனால் மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் இப்போதைக்கு என் மகன் நடிக்க மாட்டார். நான் 5 படங்களை தயாரித்த பிறகு அவர் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க நான் சம்மதிப்பேன் என்று கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார்.





