தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பதால்தான், நல்ல நல்ல படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடிகிறது. அவரை விட நல்ல படங்களில் நான் நடிக்க வேண்டும் என ஒரு நடிகரும், அவரை விட நல்ல படங்களை நான் இயக்க வேண்டும் என இயக்குநரும் போட்டியாக நினைத்தால்தான், அடுத்தடுத்து நல்ல படங்களாக ரசிகர்களுக்கு கிடைக்கும்.
விக்ரம் படத்தை விட, ஜெயிலர் படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். அலப்பரை கௌப்ப வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டார். அது நடந்திருக்கிறது. அதே போல், ஜெயிலரை விட லியோ பேசப்பட வேண்டும் என விஜய் நினைத்திருப்பார். அதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதே போல் படத்தை இயக்கிய இயக்குநர்களும் ஆசைப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதே வரிசையில் தமிழ் சினிமாவில், சமீபகாலமாக இசையில் அசத்திக் கொண்டிருப்பவர் அனிரூத் தான். விக்ரம் அவரது இசைதான். ஜெயிலர் அவரது இசை தான். லியோ அவரது இசைதான். இப்படி அனிரூத் பிஜிஎம் என்றாலே, ரசிகர்கள் வெறித்தனமாகி விடுகின்றனர்.
ஜெயிலர் படம் சக்சஸ் மீட்டில் கூட ரஜினிகாந்த் இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பின்னணி இசை இல்லாமல், ஜெயிலர் படத்தை பார்க்கும்போது, இவ்வளவு பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் ஏற்கப்படுமா என நினைக்கவில்லை. ஆனால் அனிரூத் படத்துக்கு பின்னணி இசை கொடுத்த பிறகு, ஜெயிலர் படமே வேற லெவலாகி விட்டது என்று பாராட்டி இருந்தார்.
ஆனால், இளையராஜாவின் இளையவாரிசு யுவன் சங்கர் ராஜா, இசையில் கொடி கட்டிப் பறப்பவர். பல வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் அவர்தான். யுவனுக்கு என்று ஒரு இசை ரசிகர் கூட்டமே உண்டு. தமிழ்நாட்டில், வெளிநாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் யுவன் சங்கர் ராஜா.
ஆனால் சமீபகாலமாக அவரது இசையில் வெளிவந்த படங்கள் பெரியதாக பேசப்படவில்லை. தோல்வியடைந்த படங்களில் கூட அவரது இசை பேசப்படும் நிலை மாறி இருக்கிறது. அதற்கு லேட்டஸ்ட் படமான இறைவன் படத்தையே சொல்லலாம். இந்த சூழலில், அல்வா போல, யுவன் சங்கர் ராஜாவுக்கு, விஜய் 68 படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனிரூத் பெயரை முந்திக் காட்டும் சவாலில், அவர் அலப்பரை கௌப்ப போகிறாரா என அவரது இசை ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர்.





