தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அமீர் நடிக்கும் வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. விடுதலை, விடுதலை 2 படஙீ்களை முடித்துவிட்டு வாடிவாசல் படப்பிடிப்பை துவங்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்ட நிலையில், பல மாதங்களாகியும் இன்னும் விடுதலை 2 படப்பிடிப்பே முடியவில்லை.
இதற்கிடையே பருத்திவீரன் தயாரிப்பு பஞ்சாயத்து காரணமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீரை தரக்குறைவாக பேசியதும், அதற்கு சூர்யா, கார்த்தி தரப்பு அமைதியாக இருந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் வாடிவாசல் படத்தில் அமீருடன் சூர்யா இணைந்து நடிப்பது சிரமம் என்றும் தகவல் பரவியது.
வாடிவாசல் படத்தில் அமீருக்கு பதில் மோகன்லாலை நடிக்க வைக்கலாம், அவரது கால்ஷீட் நான் வாங்கி தருகிறேன் என்று சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனிடம் சொன்ன நிலையில், அமீர்தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும். இது இயக்குனராக என் இறுதியான முடிவு. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தில் இருந்து நீங்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என நெத்தியடி பதில் சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன்.
ஏற்கனவே டைரக்டர் பாலாவின் வணங்கான், சுதா கொங்கராவின் புறநானூறு படங்களில் இருந்து பாதியில் விலகிய சூர்யா, வெற்றிமாறன் படத்தில் இருந்தும் வெளியேறி விடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இறுதியாக வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிப்பது சூர்யா தான் என்பதும், முக்கிய கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிப்பதும் 100 சதவீதம் உறுதியாகி இருக்கிறது.
வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க, ஆண்டுக்கணக்கில் தாமதம் நீடிப்பதால் அது வாடிவாசல் அல்ல, மூடிவாசல் என சினிமா விமர்சகர்கள் கலாய்க்கும் அளவுக்கு நிலைமை சீரியஸான நிலையில், இப்போது வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பை துவக்க களத்தில் இறங்கி விட்டார். ப்ரீ புரடக்சன் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதில் முதல்கட்டமாக அடுத்த மாதம் மதுரையில் இதற்கான புது அலுவலகம் துவங்கப்படுகிறது. மதுரை ஜல்லிக்கட்டுவை மையப்படுத்திய கதை என்பதால் மதுரைவாழ் மக்கள், மண்ணின் மணம் மாறாத அவர்களை நடிக்க அங்கு ஆடிஷன் நடத்தப்பட்டு, மதுரை சுற்றுவட்டார பகுதி மக்களே இந்த படத்தில் துணை நடிகர்களாக நடிக்க உள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு சார்ந்த பயிற்சிகளை பெறவும் மதுரையில் அடுத்த மாதம் அலுவலகம் திறக்கப்படுகிறது. வெற்றிமாறனின் இந்த வேகம், படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.





