தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். நடிகரமாக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர் என பன்முக தன்மை கொண்ட நல்ல கலைஞராக பலராலும் பாராட்டப்படுபவர். அடிக்கடி கலைத்துறையில் வித்யாசமான முயற்சிகளை செய்து வெற்றி பெறுபவர்.
பார்த்திபன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒத்தச்செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றன. ஒத்தச்செருப்பு படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்த படத்தில் பார்த்திப்ன ஒருவர் மட்டுமே நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன், அதன்பிறகு புதிய பாதை படம் மூலம் இயக்குனராக மாறினார். ஏற்கனவே தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜி கணேசனுடன் பார்த்திபன் நடித்திருந்த நிலையில், புதிய பாதையில் அவரது நடிப்பு இன்னும் அதிக வரவேற்பை பெற்றது.
புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்த நடிகை சீதாவை காதல் திருமணம் செய்துக்கொண்ட பார்த்திபன், ஒருகட்டத்தில் அவரை பிரிந்துவிட்டார். எனினும் தொடர்ந்து சினிமாவில் வித்யாசமான கதைக்களங்களில் தனது இயக்கத்தை தொடர்ந்து வருகிறார். சிறுவர்களை மையப்படுத்தி உருவான டீன்ஸ் என்ற அவரது படமும் சமீபத்தில் வெளியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் 12 பவுன் நகைககள் திடீரென சில தினங்களுக்கு முன் காணாமல் போனது. அலுவலகத்தில் பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. இதன் மதிப்பு பல லட்சம் என்ற நிலையில், போலீசில் இதுகுறித்து நடிகர் பார்த்திபன் புகார் அளித்தார். ஆனால் மறுநாளே வந்து அந்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டார்.
அலுவலகத்தில் பணிசெய்த நபரே 12 பவுன் நகைகளை திருடியதும், பின்பு அந்த நகைகளை திரும்ப பார்த்திபன் ஒப்படைத்து மன்னிப்பு கேட்டதால், அந்நபரை மன்னித்து, போலீஸ் புகாரை பார்த்திபன் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. நம்பிக்கை துரோகம் செய்து, பணிசெய்த இடத்தில் திருடிய நபரை இப்படி மன்னிக்கலாமா, பார்த்திபன் இப்படி செய்யலாமா என ஒரு தரப்பினர் விமர்சித்தாலும், இப்படி மனிதநேயத்துடன் நடந்துக்கொண்டாரே என ஒரு தரப்பினர் பார்த்திபனை பாராட்டவும் செய்கின்றனர்.





