தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். கீதா கோவிந்தம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவர கொண்டாவும் காதலித்து வரும் நிலையில், விரைவில் அவர்களது திருமண அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
விஜய் தேவரகொண்டா இப்போது கிங்டம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
அப்போது அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசியதால் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது கருத்துக்களுக்கு பழங்குடி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டா மீது முறையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த ஏப்ரல் 26ம் தேதி ரெட்ரோ படத்திற்காக நடந்த பிரமோ நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
அப்போது விஜய் தேவரகொண்டா கூறுகையில், காஷ்மீர் மக்கள் நம்மை போன்றவர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு குஷி படத்தின் படப்பிடிக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன. தன் சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. ஆனால் அவர்கள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இது இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைத்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்து கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த கருத்து பழங்குடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு சினிமா திரைப்பட உலகிலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





