தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சேரன். பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல சூப்பர்ஹிட் படங்களை தந்தவர். ஆனால் அவர் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் யாருமே நடிக்க முன்வராதது குறித்து அவரே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கூறியதாவது, ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது பிரபுதேவா தான். அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கவும், எனக்கு ஆபீஸ் போடவும் வட்டிக்கு கையெழுத்து போட்டு கடன் வாங்கினேன். ஆனால், அட்வான்ஸ் தர ஒருநாள் தாமதம் ஆனதால், ஆட்டோகிராப் படத்தில் நடிக்க பிரபுதேவா நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
அதன்பிறகு நடிகர் விக்ரமிடம் கதை சொல்லி, அவரும் ஓகே சொல்லிவிட்டார். சேது படத்தில் நடித்ததில் இருந்தே, விக்ரம் என்னுடன் தொடர்பில் இருந்தார். ஒரு நல்ல படத்தில் நடிக்க அவர் ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு ஜெமினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், ஒரு கமர்ஷியல் படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று போய்விட்டார்.
அதன்பிறகு நான் பாண்டவர் பூமி படம் ஆரம்பித்துவிட்டேன். அதன்பிறகு ஜெமினி படம் கமர்ஷியல் படமாக பெரிய அளவில் ஹிட் ஆனதால், ஆட்டோகிராப் படத்தில் பிறகு விக்ரம் நடிக்க வரவில்லை. அப்போது தங்கர்பச்சானிடம் ஆட்டோகிராப் கதை சொல்ல, அவர் அழகி படம் கதை மாதிரியே இருக்கு, இந்த படம் வந்தால் அழகி எடுக்க முடியாது என்று அழகி படத்தை எடுக்க போய்விட்டார்.
அதன்பிறகு நான் இயக்கிய பாண்டவர் பூமி பெரிய ஹிட் ஆனது. அடுத்து ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை நான் அணுகியும் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க சம்பளம் பிரச்னை, கால்ஷீட் என பல காரணங்களால் யாருமே வரவில்லை. அப்போது, தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தில், அவரது வற்புறுத்தலால் நான் நடித்தேன். அதே நேரத்தில் அந்த கதையும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனாலும் நடித்தேன். அந்த படம் பெரிய ஹிட் ஆனது.
ஆனால் சொல்ல மறந்த கதை படத்தின் வெற்றிக்கு பிறகும் நான் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க நினைக்கவில்லை. யாருமே நடிக்க முன்வராத நிலையில், சொல்ல மறந்த கதை படம் வெற்றி பெற்றதே, நான் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் என்று பின்னால் தோன்றியது. ஏன் நானே நடித்தால் என்ன, என்ற முடிவுக்கு வந்து அதன்பிறகுதான் ஆட்டோகிராப் படத்தில் நடித்தேன், என்று சேரன் கூறியிருக்கிறார்.





