நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர். உதவி என கேட்டு வந்த யாரையும் அவர் வெறும் கையோடு திருப்பி அனுப்பியதில்லை. மற்றவர்களுக்கு உதவுவதில் மற்றொரு எம்ஜிஆராக அவரை ரசிகர்களும், தொண்டர்களும் பார்த்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்த காலகட்டம்தான், தமிழ் சினிமாவின் பொற்காலம் என்கின்றனர் மூத்த நடிகர்கள்.
விஜயகாந்த் சில முக்கிய விஷயங்களில் எந்தவித காம்ப்ரமைஸ் இல்லாமல் வாழ்ந்தவர். அதாவது பெண்களை தவறாக சித்தரிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களை துன்புறுத்தும் அல்லது ஆபாசமான காட்சிகளில் நடிக்க மாட்டார். அதனால் பெண்கள் மத்தியில் விஜயகாந்துக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.
நடிகர் விஜய்காந்த் நூற்றுக்கணக்கான தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் மற்ற எந்த மொழி படத்திலும் அவர் நடிக்கவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்தமொழி படத்திலும் அவர் விரும்பியிருந்தால் நடித்திருக்க முடியும். ஆனால் அவர் தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். விஜயகாந்த் தாய்மொழி தெலுங்கு என்றாலும் எப்போதும் அவர் தமிழில்தான் பேசினார்.
விஜயகாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், அவரை விளம்பர படங்களில் நடிக்க சில தயாரிப்பு நிறுவனங்கள் அணுகியது. ஆனால் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். பணத்துக்காக மோசமான பொருளுக்கு நான் ஆதரவு தர மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்தவர்.
அதுமட்டுமல்லாமல், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவுவதில் விஜயகாந்துக்கு நிகராக யாரும் கிடையாது. குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தார். அதே போல் எங்கள் அண்ணா படத்தில் சூர்யாவுடன் நடித்திருப்பார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கடனில் தத்தளித்த போது, சங்கத் தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார். இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நட்சத்திர நடிகர்களை அழைத்துவந்து பேச வைத்தார். அதில் கிடைத்த பெரும் தொகையை வைத்து, நடிகர் சங்க கடன்களை அடைத்தவர் விஜயகாந்த். இப்படி எல்லா விதங்களிலும் ஒரு தலைவனாக விளங்கியதால்தான் அவருக்கு கேப்டன் என்ற பெயர் மிக பொருத்தமாக அமைந்தது.





