தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் தியாகராஜன். நீங்கள் கேட்டவை, தீச்சட்டி கோவிந்தன், மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன் என பல அதிரடி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். இவரது மகன்தான் நடிகர் பிரசாந்த். கடந்த 1990ம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக பிரசாந்துக்கு அமைந்தது. குறிப்பாக தேவா இசையமைத்த பாடல்களும், ஜனகராஜ் – குமரிமுத்துவின் வித்யாசமான காமெடியும் வைகாசி பொறந்தாச்சு படத்தில் சில்வர் ஜூப்ளி படமாக வெற்றி பெறச் செய்தது. தொடர்ந்து அரும்பு மீசை நாயகன் பிரசாந்துக்கும் பட வாய்ப்புகள் குவிந்தது.
பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரசாந்த் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்து இன்னும் பிரபலமானார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்த படங்கள் எல்லாமே மிகப் பெரிய வெற்றியை பெற்றன.
தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஆணழகன், சாக்லேட், அப்பு, பார்த்தேன் ரசித்தேன், வின்னர், தமிழ், பொன்னர் சங்கர் என பல படங்களில் நடித்த பிரசாந்த், கடந்த 2005ம் ஆண்டில் கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். திருமணமான பிறகு சில மாதங்கள் கழித்துதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது. இந்த பிரச்னையில் பிரசாந்தின் இமேஜ் டேமேஜ் ஆகி, அவரது திரையுலக பயணமே அஸ்தமித்துப் போனது.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார் பிரசாந்த், நடிகர் விஜய் நடித்துவரும் கோட் படத்தில், பிரசாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் அந்தகன் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இன்று பிரசாந்த் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
விஜய், அஜீத் எல்லாம் 10 லட்சம், 25 லட்சம் ரூபாய் என சம்பளம் வாங்கிய நிலையில், நடிகர் பிரசாந்த், 1990களிலேயே தனது சம்பளமாக 50 லட்சம், 60 லட்சம் ரூபாய் என வாங்கியவர். இவருக்கு தி நகரில் 17 மாடிகள் கொண்ட பிரசாந்த் கோல்டு டவர் என்ற மிகப்பெரிய பில்டிங் உள்ளது. ஜோய் ஆலுக்காஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இங்கு வாடகைக்கு இருப்பதால் இதன் மாத வாடகையே பல கோடிகளை அள்ளித் தருகிறது. இதுதவிர சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். சில பிஸினஸ்களிலும் முதலீடு செய்திருப்பதால் கோடி கோடியாக மாதந்தோறும் வருமானம் சினிமாவில் நடிக்காமலேயே பிரசாந்துக்கு கிடைத்து வருகிறது.





