கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் திரையரங்குகளில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.
ரஜினிகாந்த் கெரியரில் மிக வித்தியாசமான ஹாரர் திரைப்படமாக இது அமைந்தது. சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா பார்வையாளர்களை தனது அசத்தலான நடிப்பால் மிரட்டியிருந்தார். இத்திரைப்படத்தில் காட்டப்படும் அரண்மனையும் அதில் சந்திரமுகி அறை இருக்கும் தெற்கு வாசலையும் திரையில் காட்டும்போதெல்லாம் மிகவும் பயத்தை கொடுக்கும்.
இது ஒரு பக்கம் இருக்க, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி மிகவும் பிரபலமான ஒன்று. இப்போதும் இத்திரைப்படத்தின் காமெடிகளை ரசிப்பவர்கள் பலர் உண்டு. குறிப்பாக “மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு” என்ற காமெடி வசனம் இப்போதும் டிரெண்டிங்கான ஒன்று.
இவ்வாறு மக்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் இயக்குனர் பி.வாசு. “சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் சந்திரமுகியாக வருகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “சந்திரமுகி 2” திரைப்படத்தை முதலில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்ததால் அந்த நிறுவனத்தால் தயாரிக்க முடியவில்லையாம்.
“சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தகவல் வந்தவுடனேயே ராகவா லாரன்ஸ் தானே இந்த படத்தில் நடிப்பதாக முன் வந்தாராம். அதன் பின் அந்த நிறுவனம் இத்திரைப்படத்தை கைவிட்டபோது ராகவா லாரன்ஸே இத்திரைப்படத்தை தயாரிப்பதாக கூறியுள்ளார். அந்தளவுக்கு இந்த புராஜெக்ட்டின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தாராம் ராகவா லாரன்ஸ்.
அதனை தொடர்ந்துதான் லைகா நிறுவனத்தின் சிஇஓ தமிழ் குமரனை பி.வாசு சந்திக்க நேர்ந்ததாம். அப்போது அவரிடம் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் ஒன் லைன்-ஐ கூறியுள்ளார். ஒன் லைனை கேட்டதுமே இத்திரைப்படத்தை தயாரிப்பதாக ஒப்புக்கொண்டாராம். இவ்வாறுதான் “சந்திரமுகி 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது.





