இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை எடுத்திருக்கும் அவர், நான் ஈ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா திரும்பி பார்க்கும் இயக்குனராக உருவெடுத்தார். ஒரு ஈ, வில்லனை பழி வாங்குவது தான் இந்த திரைப்படத்தின் கதை.
யாருமே யோசித்துப் பார்க்க முடியாத இந்த கதையை, தனது அட்டகாசமான திரைக்கதையின் மூலம் சுவாரசியமாக கொடுத்தார். வில்லனை கொல்ல ஒரு ஈ என்னென்னவெல்லாம் செய்கிறது என்பதை ராஜமௌலியின் கிராபிக்ஸ் காட்சிகள் காண்போரை அசர வைத்தன. இப்படியாக நான் ஈ திரைப்படம் நாடு முழுவதும் ரீச் ஆனது.
இதன்பிறகு, பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களை அடுத்து அடுத்து கொடுத்து இந்திய சினிமாவை தலைநிமிர வைத்தார் ராஜமவுலி. சாதாரண ஒரு கதை தான் என்றாலும், அதன் திரை கதையும் காட்சி அமைப்புகளும் மிக ஸ்ட்ராங்காக இருந்தால், கோடி கோடியாக அள்ளலாம் என்பதை இந்த திரைப்படம் உணர்த்தியது.
தெலுங்கு சினிமா மட்டுமல்ல, தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் சக்கை போடு போட்டது பாகுபலி திரைப்படம். சொல்லப்போனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் வெற்றி அபரிமிதமாக இருந்தது. மிகவும் கச்சிதமாக திரைக்கதையை அமைத்து, அதில் கூர்மையான வசனங்களை கொடுத்து பலரும் வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவரானார் ராஜமவுலி.
இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை அவர் இயக்கினார். இதுவும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்று, உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் தற்போது, மகேஷ்பாபு உடன் இணைந்து படம் எடுத்து வருகிறார் ராஜமவுலி.
வேரூன்றி இருக்கும் இந்திய வரலாற்றின் அடிப்படையைதான் இந்த திரைப்படம் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காசி தோன்றிய வரலாறை இந்த திரைப்படம் கூறுவதாக சொல்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய வனப்பகுதியை செட் போட்டிருக்கிறார்களாம். படத்தில் மகேஷ்பாபு உடன் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும் இடம் பெற்றுள்ளார். விரைவில் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





