நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திவருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, யோகி பாபு, சரவணன் என பலரும் நடித்திருந்தனர். இவர்கள் தவிர்த்து சிறப்பு தோற்றத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில் ஆகியோர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் தற்போது வரை ரூ.525 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பின் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை வசூல் சக்கரவர்த்தி என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதற்கிடையே ‘ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே இமயமலைக்கு சென்ற ரஜினி, சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். அடுத்ததாக அவர் ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
ரஜினியின் 170ஆவது படமாக உருவாகும் இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வானந்த் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் மிகப்பெரும் கவனம் பெற்ற இயக்குநர் ஞானவேல், இம்முறை ரஜினியை வைத்து எந்த மாதிரியான சமூக பிரச்னையை திரையில் விவரிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது நடிகர் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர், பாலிவுட்டில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ஹம் படத்திற்கு பின் இதில் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இதனால் 32 ஆண்டுகளுக்குப் பின் இரண்டு சூப்பர்ஸ்டார்களை ஒரே படத்தில் ரசிகர்கள் பார்க்க உள்ளனர். மேலும் அமிதாப் பச்சன் நேரடியாக தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.





