ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெளியிடப்படுகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன் லால், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

“ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று அட்டகாசமான பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்களிடையே அப்பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க “ஜெயிலர்” வெளியாகவிருக்கும் அதே நாளில் மலையாளத்திலும் “ஜெயிலர்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் த்யான் சீனிவாசன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை சக்கீர் மடத்தில் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சக்கீர் மடத்தில் சமீபத்தில் இது குறித்து பேசியபோது, தனது சொத்துக்களை விற்றுத்தான் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ள அவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் மட்டும் டைட்டிலை மாற்றி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாம்.
மேலும் பேசிய அவர், “நானும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்தான். அவருடைய படம் வெளிவந்தால் அவரது படத்தை முதலில் பார்க்கத்தான் நானும் விரும்புவேன். ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். ஆதலால் அவர் என் கஷ்டத்தை புரிந்துகொண்டு மலையாளத்தில் மட்டும் ஜெயிலர் டைட்டிலை மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். என்னுடைய எதிர்காலமே இந்த படத்தில்தான் இருக்கிறது. எனக்கு தற்கொலை எண்ணம்தான் வருகிறது” என்று மிகவும் வேதனையோடு பேசியுள்ளார்.





