குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் ஏகே 64 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2026ம் ஆண்டில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸில் அஜீத்குமார் முழு கவனமும் செலுத்தியதால் அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை. அதனால் 2026ம் ஆண்டில் அவரது புதிய படம் துவங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஏகே 64 படத்தின் தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் அஜீத்குமார் சம்பளமே 180 கோடி ரூபாய் என்கின்றனர். ஆனால் இப்போதைய சூழலில் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்பதே தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஏனெனில் ஓடிடி நிறுவனங்கள் படத்துக்கான உரிமம் விற்பனை விலையை முன்பை விட பலமடங்கு குறைத்து விட்டன. முன்பு பல கோடி ரூபாய் கொடுத்து பெரிய பட்ஜெட் படங்களை வாங்கிய நிலையில் இன்று மிகவும் குறைந்த விலைக்கு தான் கேட்கின்றன. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என 2 விதங்களிலும் கணிசமான வியாபாரம் என்றால் மட்டுமே தயாரிப்பாளர் லாபமடைய முடியும்.
அதனால் ஏகே படத்தின் தயாரிப்பாளர் இதுவரை முடிவாகவில்லை. ஆனால் மதுரை கோபுரம் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது 2 நிறுவனங்களுமே இணைந்து ஏகே 64 படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். இதில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏகே 64 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்க உள்ளதாகவும் அவர் கமிட் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக வில்லி கேரக்டரில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா இந்த படத்திலும் அஜீத்குமாருடன் நடிப்பது உறுதியாகி விட்டது. இதற்கு ஏகேவும் ஓகே சொல்லி விட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.





