தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வளர்ந்து வரும் ஒரு கலைஞராக ஆர்ஜே பாலாஜி இருக்கிறார். ரேடியோ ஜாக்கியாக இருந்த அவர், கிரிக்கெட் கமெண்ட்ரி மூலம் நான் ஸ்டாப்பாக பேசி, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பிறகு சில படங்களில் காமெடி ரோல் செய்த ஆர்ஜே பாலாஜி இப்போது நடிகராக, இயக்குனராக வலம் வருகிறார்.
எல்கேஜி படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் பிறகு மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் படங்களில் நடித்து ஹீரோ நடிகராக இமேஜ் உயர்ந்தார். இப்போது நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை இயக்க கமிட் ஆகியிருக்கிறார். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களை அடுத்து 3வது படமாக இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார்.
இதுதவிர மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகமாக, திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கவும் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். ஆனால் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாரா நடிக்க அந்த படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இதற்கிடையே நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் பாலாஜி சக்திவேல், கர்ணாஸ், நட்டி, இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சொர்க்கவாசல் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது, ரசிகர்கள் படம் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்க்க முடியாது. தடுக்கவும் முடியாது. நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்வதுதான் அதற்கு சரியான பதிலாக இருக்கும். விமர்சனங்களை தடுக்க முடியாது. இப்படிதான் விமர்சிக்க வேண்டும் என்றும் கூற முடியாது.
இந்த படத்தில் மிகவும் வலுவான ஒரு கேரக்டரில் செல்வராகவன் நடித்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் அதிகமாக பேச மாட்டார். அப்படியே பேசினாலும் பூஸ்ட் இருக்கிறதா என்று கேட்பார். இல்லை என்றால் பிளாக் காப்பி கேட்பார் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த படம் கடந்த 1996ம் ஆண்டில் சென்னையில் இருந்த சிறைச்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.





