மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. மலையாள சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இப்போது 73 வயதான நிலையிலும், இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமான சூப்பரான கதைகளை, அழுத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடிகர் மம்முட்டி நடித்து தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக தளபதி மறுமலர்ச்சி ஆனந்தம் எதிரும் புதிரும் மௌனம் சம்மதம் மக்கள் ஆட்சி வந்தே மாதரம் கார்மேகம் பேரன்பு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் நண்பர்களாக நடித்தது பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய இளம் நடிகராக இருக்கிறார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு படங்களிலும் துல்கர் சல்மான் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்தாண்டில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் ரூ. 100 கோடி வசூலை கடந்த பிளாக்பஸ்டர் மூவியாக இருந்தது.
நடிகர் மம்முட்டி ஜோதிகா நடித்த காதல் தி கோர் படம் பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. கௌதம் மேனன் இயக்கிய மலையாள படத்தை மம்முட்டி தனது நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து இருந்தார். மேலும் பசில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஒரு படத்தையும் மம்முட்டியே சொந்தமாக தயாரிக்க உள்ளார். இப்போது மம்முட்டி மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எம்எம்எம்என் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தகவல் வேகமாக பரவியது. இது மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த தகவல் உண்மையல்ல, வதந்தி என்பது இப்போது உறுதியாக தெரிய வந்துள்ளது. ரமலான் நோன்பு இருந்து வரும் நடிகர் மம்முட்டி, எம்எம்எம்என் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார். மம்முட்டி பிரேக் எடுத்திருப்பதால், எம்எம்எம்என் படப்பிடிப்பு நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் மம்முட்டி பங்கேற்க உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





