இந்திய சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் எதிர்பார்க்கும் திரைப்படம் புஷ்பா 2. இதற்கு முக்கிய காரணம் அதன் முதல் பாகம் கொடுத்த தாக்கம் தான். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்த அந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
ஆரம்பம் முதலே, படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், குறிப்பிட்ட தக்க வெற்றி திரைப்படங்களை கொடுத்து அங்கு முக்கியமான ஹீரோவாக வலம் வருகிறார். இப்படியான சூழலில் தான் அவருக்கு புஷ்பா திரைப்படம் பான் இந்திய ஹீரோ என்னும் அந்தஸ்தை கொடுத்தது.
இதில் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் வந்த அல்லு அர்ஜுன், தனது தாடியை இடது கையினால் தேய்ப்பதிலும் சரி, ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நடப்பதிலும் சரி அசத்தலான மேனரிசத்தை காட்டி காண்போர் அனைவரையும் அசர வைத்தார். அவரது டயலாக் டெலிவரியும் படத்தில் பிரமாதமாக இருந்தது. சொல்லப்போனால் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அவர் 100% பொருந்தி விட்டார் என்று தான் கூற வேண்டும்.
இதுபோக ராஷ்மிகா மந்தனாவும் படத்திற்கு ஏற்றவாறு பெர்ஃபார்ம் செய்து பலரையும் கவர்ந்தார். வில்லனாக நடித்த பகத் பாஸில், கடைசி காட்சியில் வந்து மிரட்டி இருப்பார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில்தான் இதன் இரண்டாம் பாகத்தை முடித்திருக்கிறார் சுகுமார்.
வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அல்லு அர்ஜுன். அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத். படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அவர் பாடல்களுக்கு மெட்டு அமைத்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
தயாரிப்பு நிறுவனம் தன்னுடன் அன்பு காட்டுவதை தவிர வெறுப்பை தான் அதிகமாக காட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். இது மிகவும் விவாத பொருளாக மாறிய நிலையில் அவர் பின்னணி இசை அமைப்பதிலிருந்து பின்வாங்கி இருக்கிறார். இந்தப் பணியை தமன் தான் மேற்கொள்வார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அந்த வாய்ப்பு சாம் சி எஸ்ஸிற்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே இவர் தமிழில் விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். புஷ்பா 2 திரைப்படத்தில் இணைந்துள்ள சாமிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





