ஆக்சன், பிரமாண்டம், கவர்ச்சி, ஹீரோயிசம் போன்றவைகளை மட்டுமே நம்பி படம் எடுக்கிற பல இயக்குநர்கள் இருக்கின்றனர். ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ போன்ற வெற்றிப் பட இயக்குநர்களின் பார்மூலா பெரும்பாலும் இதுவாக தான் இருக்கிறது. இவர்களது படங்களை பார்த்தாலே, இது தெளிவாக புரிந்து விடும்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி கலை அம்சம் பொருந்திய பல விதங்களிலும் ரசிக்க கூடிய சில படங்கள் அவ்வப்போது வரவே செய்கின்றன. அதை சின்ன பட்ஜெட் படங்களிலும் காண முடிகிறது. பெரிய பட்ஜெட் படங்களிலும் அதை காண முடிகிறது. அப்படிப்பட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாகவும் இருந்திருக்கின்றன.
குறிப்பாக காக்கா முட்டை, குட்நைட், சித்தா, பாகுபலி, அருந்ததீ, புஷ்பா போன்ற படங்களை சொல்ல முடியும். இதில் பீட்சா சாப்பிட முடியாத ஏழை சேரி சிறுவர்களின் கனவை மையப்படுத்தி காக்கா முட்டை சொன்ன விஷயங்களை காட்சிக்கு காட்சி ரசிக்க முடியும். குறட்டையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் பிரச்னைகள், காணாமல் போன மகளை தேடி அலையும் ஒரு சித்தப்பாவின் பரிதவிப்பு, சித்தாவில் வெளிப்படும்.
அதே போல், புஷ்பா என்ற தெலுங்கு படத்தில் அல்லி அர்ஜூனின் அந்த தாய்பாசம் மிகுந்த ரவுடித்தனமான நடிப்பு, பல விஷயங்களை சொல்லும். குறிப்பாக பகத்பாசிலுடன் அவர் கடைசியில் பேசும் அந்த காட்சி, வசனங்கள் எல்லாம் பிராண்டட் படமாக அதை, ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. காலணியை கழட்டி விட்டு பின் காலில் மாட்டிக்கொள்ளும் அந்த பாடல் காட்சியில் கூட ஒரு கவிதை போன்ற அழகு இருந்தது.
இப்போது புஷ்பா படத்தின் 2ம் பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 25ம் தேதி புஷ்பா படத்தின் 2ம் பாகம் வெளியாக இருக்கிறது. ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் இந்த படம், பெரிய அளவில் முதல் பாகம் போலவே பேசப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், புஷ்பா படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் காட்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு சென்டிமெண்டாக பார்க்கப்படுகிறது. அதனால், புஷ்பா படத்தின் 2ம் பாகத்திலும் சமந்தாவின் அதே போன்ற ஒரு அயிட்டம் சாங் இடம்பெற உள்ளது. இதற்காக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.





