ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்டவர் இயக்குனர் அட்லி. முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவர், அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைந்தார். தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் அட்லி.
ஒரு பக்கம் அட்லி மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மற்ற திரைப்படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ராஜா ராணி திரைப்படம் மெகா ஹிட் ஆன சமயத்தில் அது மௌன ராகத்தின் காப்பி தான் என்று பலர் கூறி வந்தனர். இருப்பினும் இது இயக்குனருக்கு முதல் படம் தானே என்றும், திரைக்கதையை அவர் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் எனவும் பலரும் ஆதரவாக பேசினர்.
ஆனால் அடுத்தடுத்து வெளியான அட்லி திரைப்படங்கள் தொடர்ந்து காப்பி புகாரில் சிக்கின. தெறி திரைப்படம், சத்ரியனைப் போல் உள்ளது என்றும், மெர்சல் திரைப்படம் அப்படியே அபூர்வ சகோதரர்கள் படத்தின் சாயல் எனவும் பலர் கூறினர். ஆனால் அட்லியோ, ஏழு ஸ்வரங்கள்தான் மாறி மாறி இருப்பதாகவும், அதனையே திரைப்படமாக எடுப்பதாகவும் கூறினார்.
இப்படி இருக்க, 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தை அடுத்து, அட்லியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகவே இல்லை. இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானுடன் இணையப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஜவான் என டைட்டில் வைக்க, படத்தின் வேலைகள் பரபரப்பாய் நகர்ந்தன.
இந்தப் படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி தயாரிக்க, கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் இணைந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், ஜவான் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. இந்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. குறிப்பாக, மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு படத்தில் இருந்து காப்பியடிக்கும் அட்லி இந்த முறை பல திரைப்படங்களில் இருந்து காட்சிகளை சுட்டிருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சர்தார், பாகுபலி, ரமணா, மெர்சல் என பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் ஜவான் படத்தை பார்க்கும் போது நினைவூட்டுவதாக தெரிவிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, விமர்சனங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வசூல் மழை பொழிந்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் 129 கோடியே 60 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு இந்தி படமும் செய்யாத சாதனையை ஜவான் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





