நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளை ஒட்டி கடந்த மாதம் தனது படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவரது 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
இதில் சிம்புவின் 50வது படத்தை அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக நடிகர் சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் சரித்திர கால கதைகளம் என்பதால் ரூ. 150 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 49வது படத்தில் நடிகர் சிம்புவுடன் நடிகர் சந்தானமும் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே வல்லவன் மன்மதன் ஒஸ்தி போன்ற படங்களில் சிம்பு சந்தானம் காமெடி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் சிம்புவுடன் மீண்டும் சந்தானம் கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக காமெடி ரோல் நடித்து கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், இந்த படத்தில் நடிகர் சிம்பு கேட்டுக்கொண்டதால் உடனே காமெடி ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளுசபா என்ற காமெடி ஷோவில் நடித்துக்கொண்டிருந்த சந்தானத்தை, சினிமாவில் நடிக்க வாய்ப்பளித்ததே நடிகர் சிம்புதான்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் சிம்பு நடித்திருக்கிறார். இந்த சூழலில் அடுத்ததாக தனது 49வது படத்தில் நடிக்க சிம்பு தயாராகி விட்டார். இன்னும் சில தினங்களில் எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது எக்ஸ் பதிவில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் எஸ்டிஆர் 49 படத்தின் இசை பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாகவும் அவர் அப்டேட் தந்திருக்கிறார். இளைய இசையமைப்பாளர் சாய் அபயங்கள் இந்த படத்துக்கு இசையமைப்பதையும் உறுதி செய்த சிம்பு, அந்த பதிவில் அவரையும் வரவேற்றிருக்கிறார். இது புத்தாண்டு பரிசாக சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





