தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் பார்க்கப்படுவர் நடிகர் எஸ்ஜே சூர்யா. நடிப்பு அரக்கன் என்ற அடைமொழியுடன் அவர் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் அவரது வில்லன் நடிப்பு, ராயன் படத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
முதலில் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர்தான் எஸ்ஜே சூர்யா. நடிகர் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இதில் 2 மாறுபட்ட கேரக்டரில் அஜீத் அசத்தியிருப்பார். குறிப்பாக வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக, தனது தம்பி மனைவி சிம்ரன் மீது ஆசைப்படும் வில்லன் நடிப்பில் அதகளம் செய்திருப்பார். அந்த படத்தை இயக்கியவர் எஸ்ஜே சூர்யா தான்.
தொடர்ந்து நடிகர் விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம்தான் குஷி. இந்த படத்தின் டைரக்டரும் எஸ்ஜே சூர்யா தான். இப்படி இரண்டு மாஸ்ஹிட் படங்களை கொடுத்த எஸ்ஜே சூர்யா தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, நியூ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு சில ஆண்டுகள் சினிமாவை விட்டே காணாமல் போனார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் இறைவி படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா, மீண்டும் படங்களை இயக்காமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்பைடர், மான்ஸ்டர், இசை, மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தொடர்ந்து மாஸ் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை அசத்திக்கொண்டு இருக்கிறார் எஸ்ஜே சூர்யா.
குறிப்பாக வில்லன் கேரக்டர்களில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு தொடர்ந்து வாய்பபுகள் குவிகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் எஸ்ஜே சூர்யாவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இருவருமே நடிப்பில் சூராதி சூரன்கள் என்பதால் அந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார் நடிகர் எஸ்ஜே சூர்யா. நடிப்பு அரக்கனின் நடிப்பை காண இந்தி ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் வில்லனாக நடிக்க எஸ்ஜே சூர்யாவுக்கு அழைப்பு வந்து, பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. ஷாருக்கானுடன் எஸ்ஜே சூர்யா இணைந்தால் அந்த காம்போவே வேற லெவலில் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.





