தமிழ் சினிமாவில் 65 ஆண்டு காலம் பயணித்தவர் கருணாநிதி. 1946ல் வெளியான ராஜகுமாரி படத்தில் கதை வசனம் எழுதத் துவங்கிய, 2011ம் ஆண்டில் வெளியான பொன்னர் சங்கர் படம் வரை, கருணாநிதி தனது வாழ்நாளில் ஒரு பகுதியை தமிழ் சினிமாவுக்காக தந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியினர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடி வரும் நிலையில், சினிமா உலகம் தரப்பில் அதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் இணைந்து செய்தது.
ஏனெனில் கருணாநிதி என்ற கதை வசனகர்த்தா, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெரிய ஆளுமையாக இருந்தார். பராசக்தி படத்தில் அவர் எழுதி அந்த வசனங்களை பேசி அறிமுகமானவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 65 ஆண்டுகளாக பல படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி, ராமானுஜர் போன்ற டிவி சீரியல்களும் எழுதினார் என்பது பலரும் அறியாதது.
திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் என்ற நிலைகளை கடந்து தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகள் பயணித்தவர், அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த நலத்திட்ட உதவிகள் ஏராளம் என்ற அடிப்படையில் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கருணாநிதி 100 விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ரஜினி, கமல் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர் சிலர் பங்கேற்றனர். ஜெயம் ரவி, வடிவேலு, நயன்தாரா, யோகிபாபு போன்ற முன்னணி நடிகர் நடிகையர் சிலரும் கலந்துக்கொண்டனர். ஆனால் எதிர்பார்த்த பார்வையாளர் கூட்டம் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அதாவது அந்த மைதானத்தில் 50 ஆயிரம் பேர் அமர முடியும். எனினும் 20 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொத்தம் இருக்கைகளை நிரப்பியவர்கள் 700 பேர்கள்தான். முன்வரிசையில் இருந்த 20 வரிசைகளை தவிர மீதி எல்லாம் காலியாகவே காட்சியளித்திருக்கின்றன. விஜய், அஜீத் போன்ற முக்கிய நடிகர்கள் விழாவுக்கு வந்திருந்தால் ரசிகர் கூட்டம் திமுதிமு என வந்து இருக்கும். இப்படி அசிங்கப்பட்டிருக்க மாட்டோம் என்று திமுகவினர் பலரும் புலம்பி உள்ளனர்.





