தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இயக்குனராக இப்பவர் டி ராஜேந்தர். கடந்த 1980 90களில் அவர் இயக்கி நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. மிக விரைவில் டி ராஜேந்தர் இயக்கிய உயிருள்ள வரை உஷா படம் ரி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதே போல் மைதிலி என்னை காதலி ஒரு தலை ராகம் உள்ளிட்ட படங்களையும் அவர் ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் டி ராஜேந்தா் கூறியதாவது, அன்று திமுகவில் இருந்த நான் வேறு எந்த கட்சிக்கும் செல்லக்கூடாது என்று முடிவெடுத்து தான் இலட்சிய திமுகவை உருவாக்கினேன். லட்சிய திமுக எனக்கு நானே கட்டிக் கட்டிக்கொண்ட தாலியாகும். இதற்கு மேல் அரசியல் தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை.
நான் எம்ஜிஆர் ரசிகன். ஆனால் திமுகவில் இருந்தேன்.இலட்சிய திமுக கட்சி அப்போது தேவைப்பட்டது. அப்போது திமுக சார்ந்த நபராக நான் இருந்தேன். கருணாநிதியை ஏற்றுக் கொண்டேன். எம்ஜிஆர் ரசிகன் நான். ஆனால் திமுக குடும்பமாக இருந்தேன். யார் கட்சிக்கும் பின்னர் நான் செல்லவில்லை. தற்போது அரசியல் கருத்துக்கள் பேச வேண்டாம் என நினைக்கிறேன்.
சினிமா தியேட்டர்களில் இன்று கட்டணம் அதிகமாக உள்ளது. அதனால் குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு சென்று ஏழை மக்களால் படம் பார்க்க முடியவில்லை என்பது எனது கருத்தாகும்.எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அமெரிக்கா சென்று சிகிச்சை அளித்தார்கள் பின்னர் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பினார்கள்.
என் தலை முடி கொட்டி விட்டது என்றார்கள். எனக்கு என்ன நடந்தாலும் என் தாய் மண்ணில் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். என் மகன் சிம்பு கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா சென்றேன். இப்போது காமெடி நடிகர்களுக்கு சினிமாவில் தட்டுப்பாடு நிலவுகிறது. நான் ஒரு படம் எடுத்து வருகிறேன். அதில் பல காமெடி நடிகர்களை உருவாக்குவேன்.
தமிழ் சினிமா உலகில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அரசியல் காரணங்களால் விஜயகாந்துடன் எனது நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் எனது மகன் சிலம்பரசன்தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கிறீர்கள். நடிகர் விஜய் எனக்கு நல்ல நண்பர். அவரது புலி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். இதைத் தாண்டி அரசியல் பற்றி எதுவும் இப்போது பேச விரும்பவில்லை. அரசியல் பற்றி பேசி எனது சினிமா நண்பர்களை இழக்கவும் நான் விரும்பவில்லை என்று டி ராஜேந்தர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





