கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜெயிலர் படம் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சரியாக போகவில்லை. படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தது. அதனால் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு இருந்தது.
அப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்னை தொடர்பு கொண்டார்கள். பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக எதிர்மறையாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை எங்களுக்கு தந்திருக்கிறது. அதனால் நெல்சன் இயக்கத்தில் நீங்கள் தாராளமாக நடிக்கலாம் என்றார்கள். அதன்பிறகுதான் நான் ஜெயிலர் படத்தில் நடிக்க முழுமையாக சம்மதித்தேன் என்று கூறினார்.
ரஜினிகாந்த் கூறிய இந்த விளக்கத்தின்படி ஒரு படம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், விமர்சன ரீதியாக ச்சீ இதெல்லாம் ஒரு படமா, என்று கடும் விமர்சனத்தை சந்தித்தாலும் வணிக ரீதியாக அந்த படம் கணிசமான லாபத்தை தந்துவிட்டால் போதும். அதில் ஹீரோவாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதே அவரது கருத்தாக எண்ணமாக உள்ளது.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த், லால் சலாம் பட விழாவில் பேசும்போது இந்த படத்தை இயக்கும் என்னுடைய மகள் ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தில் இந்த கேரக்டரில் நடித்தால் உங்களுக்கு விருது கிடைக்கும் என்று சொன்னார். எனக்கு அவார்டு எல்லாம் வேண்டாம், ரிவார்டு கிடைக்குமா என்றுதான் கேட்டேன் என்றும் ஓபனாக பேசினார்.
அதாவது ரஜினியை பொருத்த வரை அவர் நடிக்கும் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற வேண்டும். தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம் தர வேண்டும். மற்றபடி ரசிகர்கள் ரசனை சந்தோஷம் அதெல்லாம் சிறிதும் எனக்கு முக்கியமல்ல, எனக்கு படம் பல நூறு கோடிகளை வசூலில் அள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறார்.
அதனால்தான் கூலி போன்ற மொக்கை படங்களில் ரஜினிகாந்த் நடிக்க சம்மதிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம் இவ்வளவு மோசமான விமர்சனங்களை சந்தித்த பிறகும், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க முன்வருகிறார். காரணம், 4 நாட்களில் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. ரஜினியை போன்ற கமர்ஷியல் ஹீரோக்களால் தமிழ் சினிமா பாதை மாறி எங்கோ போய்விட்டது. இதனால் நல்ல தரமான படைப்பாளிகள்தான் காணாமல் போகிறார்கள். குப்பை கதை இயக்குனர்கள் கொடி கட்டி பறக்கிறார்கள்.





