தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே கதை பிரச்னை இருந்து வருகிறது. டி ராஜேந்தர் கே பாக்யராஜ் சேரன் பாரதி ராஜா கே பாலசந்தர் போன்ற பல ஜாம்பவான் இயக்குனர்களின் மிகப்பெரிய பலமே அவர்களது கதை, திரைக்கதை, வசனம்தான். அதிலும் இந்திய ஆளுமையாக சிறந்த கதை ஆசிரியராக கே பாக்யராஜ் இன்றும் புகழப்படுகிறார்.
ஆனால் இப்போது படம் இயக்க வரும் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களது திறமையை நம்பி படம் எடுக்காமல் பிற மொழிகளான தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி இன்னும் சில இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து கதைகளை காட்சிகளை உருவி படம் எடுக்கின்றனர். விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள்தான், ரீ மேக் ஆக தமிழில் வெளியானது.
ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே சொந்தமாக கதை திரைக்கதை வசனம் எழுதுகின்றனர். அதிலும் சிலர் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சுட்டு விடுகின்றனர். அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஹிட் படங்களை அப்படியே தமிழில் ரீ மேக் செய்தும் இயக்கி வெற்றி பெறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமல்ல, படத்தின் டைட்டிலை கூட சொந்தமாக நேரம் ஒதுக்கி யோசிக்க பல இயக்குனர்கள் தயாராக இல்லை. அதனால்தான் கூலி பராசக்தி கதாநாயகன் வேலைக்காரன் குரு சிஷ்யன் காக்கி சட்டை எதிர்நீச்சல் அமரன் என பழைய பட டைட்டில்களையே மீண்டும் வைத்து ஒப்பேத்தி விடுகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது. அதே போல் நடிகர் மாதவன் இப்போது ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.
அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே அமரன் என்ற படத்தில், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்தார். அந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவர் நடித்து வரும் பராசக்தி வரும், மொழிப் போர் தியாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இராசேந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பயோபிக் படங்களில் நடிக்க நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.





