தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் நடிகை ராதிகாவை இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்தார். நடிகவேள் எம்ஆர் ராதா மகள் என்ற அடையாளத்துடன் வந்த அவர் இப்போது பொம்பள சிவாஜி என்று பாராட்டும் அளவுக்கு ஒரு சிறந்த நடிப்பை தாய்கிழவி படத்தில் பவுனுத்தாயி கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். பவுனுத்தாயாக இதில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்றும் படம் பார்த்த செலிபரட்டிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பெண்கள் தங்கத்தை பாரம்பரியமாக எப்படி கட்டிக் காத்து கொண்டு வந்து தங்களது குடும்ப கஷ்டங்களை தீர்த்தார்கள், கால மாற்றத்தால் உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்கள், பணம் சொத்தின் மீதும் மனிதர்களுக்கு ஏற்படும் பேராசை போன்ற பல விஷயங்களை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக தாய்க்கிழவி படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கொடுத்திருக்கிறார்.
தாய்கிழவி படத்தில் ராதிகா சரத்குமார் பிராஸ்தெடிக் மேக்கப்பில் கிராமத்தில் வாழும் தண்டட்டி கிழவியாக அச்சு பிசகாமல் நடித்து அசத்தி இருக்கிறார். தாய்கிழவி படத்தின் கதை இதுதான். சாகும் தருவாயில் தாய்கிழவி அதாவது பவுனுத்தாயி படுக்கையில் இருக்கும்போது எப்போதோ அவரை விட்டு பிரிந்து சென்ற மகன்கள் இப்போது வந்து தாயை பார்க்கின்றனர். ஆனால் வீட்டுக்குள் வர முடியாமல் அவர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.
இதற்கான பிளாஷ்பேக் காட்சியில் சொத்தை பிரித்து கேட்கும் மகன்களிடம், என் புருஷன் சொத்து. கடைசி வரை எனக்கு தான் சொந்தம். நான்தான் ஆண்டு அனுபவிப்பேன் என்று சொல்லி பவுனுத்தாயி மகன்களை விரட்டியடிக்கிறார். தனித்தனியாக சென்ற மகன்கள் தற்போது மீண்டும் அம்மாவை வந்து கவனித்தார்களா? மகன்களுக்கு பவுனுத்தாயின் சொத்துக்கள் கிடைத்ததா? கடைசியில் பவுனுதாயிக்கு என்ன ஆனது என்பதுதான் தாய்க்கிழவி படத்தின் கதை.
இந்த படத்தை பேசன் ஸ்டுடியோ சுதன் சுந்தரம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். பவுனுத்தாயின் மகன்களாக நடித்துள்ள அருள்தாஸ் சிங்கம்புலி பாலசரவணன் நடிப்பு, அவர்களின் கேரக்டர் வடிவமைப்பு தான் படத்தை மிகவும் கலகலப்பாக்குகிறது. ராதிகா தனது தேர்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார். மற்ற கேரக்டர்களும் படத்தின் கதை ஓட்டத்துக்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களை கவருகிறது.
படுத்த படுக்கையாக கிடக்கும் அம்மாவை மீண்டும் மகன்கள் காப்பாற்ற போராடுகின்றனர். அதற்கு ஒரு விஷயம் காரணமாக அமைவதும், கடைசியில் கிளைமாக்ஸ்சில் வரும் டிவிஸ்ட்டும் அசத்தலாக உள்ளது. கண்டென்ட் புதுசாக இருந்தாலும் கதை ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்டதைப் போலவே இருப்பது மைனஸ் ஆக உள்ளது. சில இடங்களில் சில காமெடி காட்சிகள் இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளது. மொத்தத்தில் ரசிகர்கள் கொண்டாடும் தாய்கிழவியாக ராதிகா சரத்குமார் வெள்ளித் திரையில் ஜொலிக்கிறார்.





