தமிழ் சினிமாவில் இயக்குனர் தங்கர் பச்சான் மிகவும் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளியாக இருந்து வருகிறார். சினிமாவை கமர்ஷியல் குப்பை படங்களாக தரும் இயக்குனர்களுக்கு மத்தியில் அழுத்தமான, ஆழமான யதார்த்த கதைகளை படமாக்குவதில் தங்கர்பச்சான் போன்றவர்கள் அதிக அக்கறை காட்டும் படைப்பாளிகளாக இருக்கின்றனர்.
அந்த வகையில் தங்கர்பச்சான் இயக்கிய அழகி படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, வி நடராஜன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர். ஒரு நல்ல படைப்பாக இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் தந்திருந்தார்.
தங்கர்பச்சான் இயக்குனர் என்பதை கடந்து சிறந்த ஒளிப்பதிவாளர். அதனால் இவருக்கு ஒளி ஓவியர் என்ற புகழும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், 9 ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இதில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் தங்கர் பச்சான் நடித்திருந்தார்.
சமீபத்தில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான கருமேகங்கள் கலைகின்றன படத்தை பாரதிராஜா, சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு தங்கர்பச்சான் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் தனது மகனுக்கு விஜித் என பெயர் வைத்துள்ளார். தமிழ் பற்றாளரான இவர் தமிழில் தன் மகனுக்கு பெயர் வைக்காமல் இப்படி விஜித் என வைத்திருப்பது விமர்சனத்தை கிளப்பியது. விஜய், அஜீத் பெயர்களில் இருந்து விஜித் என அவர் தன் மகனுக்கு பெயர் வைத்திருப்பதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து சமீபத்தில் விளக்கம் தந்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான், என் மனைவி 7 மாத கர்ப்பமாக இருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த நான், தூக்க கலக்கத்தில் விஜித் எப்படி இருக்கிறான் என்று கேட்டிருக்கிறேன். என் மனைவி அதையே பிடித்துக்கொண்டு பிடிவாதமாக விஜித் என என் மகனுக்கு பெயர் வைத்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். நிச்சயமா இது கம்பி கட்ற கதைதான் என்று ரசிகர்கள் ஒளி ஓவியரை கலாய்த்து வருகின்றனர்.





