இந்தியன் 2 படப்பிடிப்பு வைஷாக்கில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே 50.60 பேர் இருப்பதுதான் வழக்கம். அது சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் தொழிலாளர்கள் கூட்டம் காணப்படுவது வழக்கம்தான்.
அப்படி இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. எப்போதுமே ஷூட்டிங் நடக்கும்போது, அதற்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு மற்றவர்கள் படப்பிடிப்பு தளத்தை விட்டு சற்று ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்துகொள்வது வழக்கம். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் மற்றும் வேறு யூனிட் சார்ந்த 2 பேர் என 3 பேரும் ஒதுக்குப்புறமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், அங்கு அமர்ந்திருந்த 3 பேரை பார்த்து பயங்கரமாக டென்சன் ஆகியுள்ளார். அவர்களை அருகில் அழைத்த ரவிவர்மன், கேமரா உயரத்துக்குச் செல்லும் கிரேனில் இருந்த 15, 20 கிலோ வெயிட் உள்ள இரும்பு குண்டுகளை கையில் 45 நிமிடங்களை வைத்திருக்குமாறு பனிஷ்மென்ட் கொடுத்துள்ளார்.
அவர்களும் வேறு வழியின்றி அந்த வெயிட்டான இரும்பு குண்டுகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். இதையறிந்த ஷங்கர், உடனடியாக அந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது. உடனே அவர்களை அதை கீழே போடச் சொல்லுங்கள் என சொல்லியுள்ளார். ஆனால் ஷங்கர் சொல்லியும் அந்த ஒளிப்பதிவாளர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த இருவரை, அது சார்ந்த பொறுப்பாளர் வந்து அழைத்துச் சென்ற நிலையில், ஒளிப்பதிவாளர் தன் உதவியாளரை மட்டும் இரும்பு குண்டை கீழே வைக்க கூடாது என மிரட்டி, அவரை தண்டித்துள்ளார். இந்த பிரச்னை இப்போது படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை இப்போது பெப்ஸி தொழிலாளர் அமைப்பு வரை சென்றுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களை இதுபோன்று கொத்தடிமையாக நடத்தி, அதுவும் அதிக எடைகொண்ட இரும்பு குண்டுகளை சுமக்க வைத்து தண்டிப்பது போன்ற கொடுமையான விஷயங்களை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், பெப்ஸி தரப்பில் இருந்து எதிர்ப்பும், அவர்களது கண்டனமும் நிச்சயம் எழும் என்பதால் ஷங்கருக்கு இது தலைவலியாக மாறியுள்ளது.





