நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகராக இருக்கிறார். காலா படத்தில், ரஜினிக்கு மகனாக நடித்த மணிகண்டன் அடுத்து ஜெய்பீம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். லாக்கப்பில் விசாரணை கைதியாக அவரை அடித்து துன்புறுத்தும் காட்சிகளில், அவரது தத்ரூபமான நடிப்பு, படம் பார்த்த ரசிகர்களை பதற வைத்தது.
தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனி நடித்த ஏலே படத்திலும் மணிகண்டன் நடிப்பு சிறப்பாக இருந்தது, காதலும் கடந்து போகும், குட்நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்த மணிகண்டன், இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இளம்நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆபாவாணன் தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில் மிக முக்கிய இயக்குனராக இருந்தவர். திரைப்பட கல்லூரி மாணவராக வந்து படங்களை இயக்கிய இயக்குனர்களில் இவரும் மிக முக்கியமானவர். ஆபாவாணன் இயக்கத்தில் வெளிவந்த ஊமை விழிகள், இணைந்த கைகள் இரண்டு அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன.
ஆனால் ஆபாவாணனை பொருத்தவரை, அவரது பெயர் பரிச்சயமான அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அவரது முகம் தெரியாது. ஏனெனில் அப்போதெல்லாம் பத்திரிகை பேட்டிகளில் கூட தங்களது முகத்தை இயக்குனர்கள் காட்ட மாட்டார்கள். அதனால் பொது இடங்களுக்கு சென்றுவர அவர்களது பிரைவசி, தொழில் பாதிக்கும் என்று கருதுவார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் குட்நைட் பட நடிகர் மணிகண்டன் நடிப்பு மிக பிடித்துப் போனதால், அவரை வைத்து ஒரு படம் இயக்க ஆபாவாணன் முடிவு செய்திருக்கிறார். அதற்கான கதையும் தயார் செய்துள்ளார். சினிமாத்துறை சார்ந்த யாரிடமோ பேசி, மணிகண்டன் போன் நம்பரை வாங்கி அவரை போனில் அழைத்திருக்கிறார்.
அப்போது உங்கள் அலுவலகத்துக்கு நான் நேரில் வருகிறேன் என்று ஆபாவாணன் சொல்ல, நீங்கள் மிகப்பெரிய இயக்குனர், என்னை தேடி நீங்கள் வருவதா, நானே வருகிறேன், என்று சொல்லி இருக்கிறார். குறிப்பிட்ட ஒரு ரெஸ்டாரெண்டில் இருவரும் குறிப்பிட்ட நேரம் நேரில் சந்திக்க பேசிவிட்டு, அதே போல் வந்துள்ளனர். ஆனால் நேரில் சந்தித்த போது, அவர் குட்நைட் படத்தில் நடித்த மணிகண்டன் அல்ல, காக்காமுட்டை படத்தின் டைரக்டர் மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. யாரோ, போன் நம்பரை மாற்றிக்கொடுத்ததால், நொந்துபோன இருவரும் பரஸ்பரம் ஸாரி சொல்லி, திரும்பிச் சென்றுள்ளனர்.





