நடிகர் சியான் விக்ரம், சிறந்த நடிகராக பல படங்களில் தன்னை நிரூபித்தவர். இன்னும் நிரூபித்துக்கொண்டு இருப்பவர். பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அவரது அசுரத்தனமாக நடிப்பை காண ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர். அந்த ஆதிவாசி கேரக்டரில் சியான் விக்ரம் ரசிகர்களின் மனங்களை அள்ளப்போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போது நடிப்புலகில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள விக்ரம், ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பின்றி தவித்தவர். பல இயக்குநர்கள் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. சேது படம் மூலம் அவரை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியவர் டைரக்டர் பாலா.
சேது படத்துக்கு பிறகுதான், சியான் விக்ரம் நடிப்பாற்றல் மற்ற இயக்குநர்களுக்கு தெரிந்தது. அதன்பின்புதான் பல படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்து மிக சிறந்த நடிகராக அவர் முன்னணி நட்சத்திர நிலைக்கு உயர்ந்தார். இதில் அந்நியன், ஐ, பிதாமகன், சாமி, பீமா, காசி என பல படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை தந்தன.
மலையாளத்தில் வெளிவந்த வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும் என்ற படத்தின் ரீமேக் தான் காசி. இதில் பார்வையற்றவராக விக்ரம் நடித்திருப்பார். தெருவில் பாட்டுப்பாடி காசு வாங்கும், கண் பார்வையற்ற தெரு பாடகராக சியான் விக்ரம் இதில் நடித்திருப்பார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.
கண்ணின் கருவிழிகள் மேலே சொருகிய நிலையில், வெண்படலம் மட்டுமே தெரியும் விதமாக, சட்டையில் கழுத்து பட்டன் போட்டுக்கொண்டு கையில் குச்சி ஒன்று வைத்துக்கொண்டு தாடி, மீசை அற்றவராக இந்த படத்தில் காசி கேரக்டரில் பார்வையற்ற ஒரு மனிதராக வாழ்ந்திருப்பார் சியான் விக்ரம். மிகவும் கஷ்டப்பட்டுதான், இந்த கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார். கண்கள் பழைய நிலைக்கு திரும்பவே பல நாட்கள் ஆகியிருக்கிறது.
காசி படம் ரிலீஸான சமயத்தில், கூட்டத்தில் ஒருவராக கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்ற சியான் விக்ரம், ரசிகர்களுடன் அமர்ந்து காசி படம் பார்த்திருக்கிறார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு முதியவர், தம்பி இந்த படத்தில் நடித்தவர், கண் பார்வை இல்லாத நிலையிலும் எப்படி சிறப்பாக நடித்திருக்கிறார் பாருங்கள் என கூறியிருக்கிறார். அந்த முதியவரின் விமர்சனத்தை கேட்டு, சியான் விக்ரம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.





