நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய தொகையை சுற்றி நடைபெறும் கதையாக இது எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, அண்மையில் வெளியான படத்தின் டீசரும் அமைந்திருந்தது. அதில் பிச்சைக்காரன் வேடத்தில் தனுஷ் காட்சியளித்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இட்லி கடை என்னும் படத்தை அவர் இயக்கி வருகிறார். இதுபோக தனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கான இறுதிப் பணிகளிலும் அவர் ஈடுபட்டு இருக்கிறார்.
இப்படி தனுஷ் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க அவர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் நயன்தாரா. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனது திருமண டாக்குமெண்டரியை, நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கொடுத்த அவர்கள், அதன் மூலம் ஒரு கணிசமான தொகையை பெற்றனர்.
ஆனால், இந்த டாக்குமென்டரி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இப்படியான நேரத்தில் தான் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் என்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் என் ஓ சி சான்றிதழை தனுஷ் கொடுக்க மறுத்ததாலும், தொடர்ந்து காலதாமதம் செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக அவர் பொங்கி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர் தனுஷ் என்றும் சாடியிருந்தார். கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கடுமையாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் தனுசுக்கு எதிராக பேச ஆரம்பித்தனர். அதேசமயம் நடிகரின் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்காமல் எப்படி அவர் மீது குறை கூற முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இது ஒரு பக்கம் இருக்க நயன்தாராவின் அறிக்கையை நடிகர் தனுஷ் கண்டு கொள்ளவே இல்லை. தனது அடுத்தடுத்த பணிகளில் அவர் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் நயன்தாராவும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் அவர், அட்லி மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், நெகட்டிவிட்டியை புறந்தள்ளி வாழ்வதை தனுஷிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என சிலாகித்து வருகின்றனர்.





