ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்த அப்பாஸ், ஒரு கட்டத்திற்கு பிறகு தனக்கு சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு நியூஸிலாந்திற்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் நியூஸிலாந்தில் செட்டில் ஆனதற்கு காரணம் விஷால்தான் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அப்பாஸ்.

அப்பாஸ் செலப்ரிட்டி கிரிக்கெட் லீக் என்ற ஒன்றை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தார். அந்த சமயத்தில் விஷாலுக்கும் அப்பாஸிற்கும் இடையே பிரச்சனை வந்திருக்கிறது. இது குறித்து பேசிய அப்பாஸ், “CCL-ன் போது விஷாலுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் நான் வெளிநாட்டில் செட்டில் ஆனதற்கு விஷால் காரணம் கிடையாது” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நான் சில ஈவண்ட்டுகளை எடுத்து நடத்திக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் CCL நடத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் CCL நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் CCL-ஐ நிறுத்திவிடலாம் என்று கூட முடிவு செய்தார்கள். ஆனால் நான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறிவிட்டு பாலிவுட்டில் சல்மான் கான், தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ், கன்னட சினிமாவில் சுதீப் ஆகியோருடன் இது குறித்து பேசி பாலிவுட்-தென்னிந்தியா மோதும் முதல் போட்டியை நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நான் இரண்டு முறை போட்டியில் பங்குபெற்றேன். ஆனால் அதன் பின் CCL-ல் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதற்கு காரணம் விஷால்தான். யாரோ அவரின் தலையில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். என்னை அவர் தவறாக புரிந்துகொண்டுவிட்டார். என்னை பற்றி மற்றவர்களிடம் தவறாகவே பேசினார். இதனால் அணியில் கலகலப்பு, சகோதரத்துவம் ஆகியவை இல்லாமல் போனது. அதனால்தான் வெளியே வந்துவிட்டேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





