நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் கடந்த 10ம் தேதி வௌியானது. இந்த படம் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 51 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்கு அதிகளவில் எதிர்மறை விமர்சனங்களே இருந்து வருகின்றன. படம் பார்த்த பலரும் படம் திருப்தியில்லை என்றுதான் கூறுகின்றனர்.
இதற்கிடையே பராசக்தி படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்ற சிலர் தியேட்டர் முன்பகுதியிலும் தியேட்டர் உள்அரங்கு பகுதியிலும் கூட்டமே இல்லாததை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் அவர்கள் போடும் பதிவுகள் பொய்யல்ல என்று பலரும் அதற்கு கமெண்ட் செய்து படத்தின் தரம் அப்படிதான் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியதாவது, ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் பல தியேட்டர்களில் பராசக்தி படம் ரிலீஸாகவில்லை. இதற்கு பராசக்தி பட வினியோகஸ்தர்கள் படத்தை தரவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போது மற்றொரு முக்கிய காரணமும் தெரிய வந்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படத்துக்கு அதிகபட்சம் தமிழ்நாட்டில் 450 தியேட்டர்கள் வரை அவரது கெபாசிட்டிக்கு ரிலீஸ் செய்யலாம். ரஜினி விஜய் அளவுக்கு சிவகார்த்திகேயன் படத்தை எல்லாம் 600 700 என அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்துக்கு 450 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு விட்டது. ஜனநாயகன் படம் வராததால் மேலும் 100 தியேட்டர்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு 550 தியேட்டர்கள் வரை பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதுவே அதிகம் என்கிற நிலையில் இன்னும் 100 தியேட்டர்கள் வரை கூடுதலாக கேட்கப்பட்டதால் அவர்களுக்கு படத்தை தரவில்லை.
ஏனெனில் தடுக்கி விழுந்தால் எல்லா தியேட்டர்களிலுமே பராசக்தி என்றால் அது சரியாக வராது. இப்போதே 550 தியேட்டர்களில் பராசக்தி என்பதால்தான் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமே இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி கியூப் முறையில் இந்த படத்தை அதிக தியேட்டர்களில் வௌியிட 1.5 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதாலும் பராசக்தி படம் பல தியேட்டர்களுக்கு தரப்படவில்லை என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





