தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த மிகப்பெரிய போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைக்க 11 எம்எல்ஏக்கள் ஆதரவு என்ற நிலையில் சற்று முன்புதான் அந்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்ற நிலையில் அதில் ஒரு சபாநாயகர் ஒதுக்கப்பட்டு மீதி 107 எம்எல்ஏக்கள் தவெக வசம் இருந்தன. இதில் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 5 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 என மொத்தம் 9 எம்எல்ஏக்கள் ஆதரவு நிபந்தனையின்றி கிடைத்து விட்டது.
இதற்காக நேற்று இரவு தவெக தலைவர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று அந்த கட்சிகளின் மாநில நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பாஜக தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்கிற காரணத்தால் தவெக கட்சிக்கு ஆதரவு தந்தோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவாக கூறிவிட்டன.
இதற்கிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் தவெக ஆதரவு கேட்டது. ஆனால் தனது 2 எம்எல்ஏக்களின் ஆதரவை தர அக்கட்சி மறுத்து விட்டது. இந்த நெருக்கடியான சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்தால் மட்டுமே தவெக ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில் இப்போது அக்கட்சியும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தனது கட்சியின் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவிடம் நேரில் வழங்கியுள்ளார். இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் வி அர்லேகரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார்.
இன்று இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கவர்னர் வி அர்லேகர் கேரளம் செல்கிறார். அங்கு புதியதாக பதவியேற்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பின்புதான் சென்னை திரும்புவார் என்றும் அதற்கு பிறகுதான் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பு விழா நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 5 நாட்களாக 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெக கட்சி பல நெருக்கடிகளை சந்தித்த நிலையில் இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.





