பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த வியாழன் கிழமை வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் படத்தை பார்க்க முதல் நாளிலேயே திரையரங்குகளில் குவிந்தனர்.
பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் தழுவலாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்த திரைப்படம். அந்தக் கதையை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. அஜர்பைஜான் நாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் பலரும் கூறி வருகின்றனர். இதனால் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் அஜித்தின் நடிப்பும் அனிருத்தின் இசையும் மிக நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.
முதல் பாதியில் கதை நகர்த்தப்பட்ட விதமும், அது எடுக்கப்பட்ட போக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விட்ட நிலையில் இரண்டாம் பாதி அதனை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள். குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேர காட்சிகள் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் வேகமாக நகர்ந்து விட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இப்படியான சூழலில் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 40 கோடி ரூபாயை கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வார இறுதி வரை படத்தின் வசூல் டாபிக் கியரிலே இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும் கலவையான விமர்சனம் காரணமாக, வரும் வாரங்களில் விடாமுயற்சி திரைப்படம் வசூலை குவிப்பது சாத்தியமில்லை என்று சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதேசமயம், படத்திற்கு மட்டும் 250 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகி இருப்பதாக கூறுகிறார்கள். இதனை இந்த திரைப்படம் வசூல் செய்வதும் சற்று கடினம் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





