தமிழ் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா “மாஸ்கோவின் காவிரி” என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்னர் “பானா காத்தாடி” மூலம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த அவர் அதன்பிறகு “கத்தி”, “மெர்சல்”, “அஞ்சான்” “பத்து என்றதுக்குள்ள”, “சூப்பர் டீலக்ஸ்” என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இருப்பினும் கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டில் அவருக்கு நிறைய வெற்றி படங்கள் கிடைக்கவே அவருக்கான வரவேற்பு தெலுங்கு சினிமாவில் அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்த சமந்தா அதன்பிறகு நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தும் செய்திருந்தார்.
அதனைதொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த சமந்தா கோலிவுட், டோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்தார். இருப்பினும் கடந்த பல மாதங்களாக மயோசிட்டீஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் தற்போது பூரணமாக அந்த நோயிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக நடிப்பிலிருந்து ஐந்து மாதங்கள் பிரேக் எடுத்துள்ளார். அதற்கு முன்னதாக அவர் கைவசம் இருந்த அனைத்து படங்களையும், வெப் சீரியஸ்களையும் தற்போது நடித்து முடித்துள்ளார்.

அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிவுள்ள குஷி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த குஷி படத்திற்காக ஹைதராபாத்தில் பிரத்தியேகமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சமந்தா எந்த அளவிற்கு கஷ்டப்பட்டார் என்பது குறித்து விஜய் தேவரகொண்டா எமோஷனலாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஒரே கட்டமாக 60% படப்பிடிப்பை நாங்கள் முடித்து விட்டோம். ஆனால் அதன் பின்னர் அவர் ஜூலை மாதம் உடல்நிலை சரியில்லை என்று சொன்னார். நாங்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு அவருடைய நோயின் தீவிரத்தை எங்களுக்கு தெரிவித்த பின்னரே அதன் தாக்கம் எங்களுக்கு புரிந்தது.
ஒரு கட்டத்தில் சமந்தாவால் எங்களிடம் பேசக்கூட முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டார். அவர் கடுமையான வேதனையை உடலளவில் அனுபவித்து இருக்கிறார். இன்னமும் கூட அவர் முழுமையாக அதிலிருந்து குணமடையவில்லை. இங்கிருக்கும் லைட்டுகளால் கூட அவருக்கு தலைவலி ஏற்படும் ஆனாலும் ரசிகர்களான உங்கள் மீது உள்ள அன்பு காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உள்ளார் என நெகிழ்ச்சியாக விஜய் தேவரகொண்டா பேசியது குறிப்பிடத்தக்கது.





