இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் ஊர்வசி நடித்த படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்த்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் முதல்வர் விஜயை சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 450 ரூபாய், 300 ரூபாய் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக சினிமா தியேட்டர் நிலவரம் மோசமாக உள்ளது.
ஆண்டுக்கு 10 சதவீத படங்கள் கூட ஓடுவதில்லை. இதற்கு டிக்கெட் விலை கேண்டீன் ஸ்நாக்ஸ் விலை பார்க்கிங் கட்டணம் ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தியேட்டர்களில் படம் பார்ப்பது செலவு மிக்கதாக ஆகிவிட்டது. எனவே சாதாரண தியேட்டர்களில் டிக்கெட் விலை 100 என்கிற அளவில் இருக்க வேண்டும் என்று பல தரப்பினரும் விரும்புகிறார்கள்.
இப்போது அதிகபட்சமாக 200 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இதுவே அதிகம் என்று பலரும் கண்டன குரல்கள் எழுப்புகின்றனர். இந்நிலையில் சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பது சரியல்ல. வட மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நிலைமை வேறு. தமிழகத்தில் நிலைமை வேறு. நலிந்து வரும் சினிமாவை காப்பாற்ற அவர் தனது சம்பளத்தை தனது டீம் செலவுகளை குறைக்க வேண்டும். அப்படி செய்தால் படத்தின் பட்ஜெட் குறையும். தயாரிப்பாளர் பாதுகாக்கப்படுவார்.
விஜய் சேதுபதி படங்களில் இப்போதைக்கு தலைவன் தலைவி படம் மட்டுமே நன்றாக ஓடியது. அவரது பல படங்கள் தோல்வியடைந்தன. அவர் நடித்த சில படங்கள் வியாபாரத்தில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் தடைபட்டு நிற்கிறது. இதற்கு படத்தின் பட்ஜெட் தான் முக்கிய காரணம். அவர் சம்பளத்தை தனது வியாபாரத்துக்கு தக்கபடி குறைத்தாலோ வருமானத்தில் பகிர்வு என்ற அடிப்படையில் சம்பளம் வாங்கினாலோ அவர் நடிக்கும் சினிமா படங்கள் தப்பிக்கும்.
அதை விடுத்து சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி சொல்வது சரியில்லை. மற்ற எந்த ஹீரோவும் இப்படிப்பட்ட கோரிக்கையை வைக்கவில்லை என விஜய் சேதுபதிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம் டிக்கெட் விலையை அதிகரித்தால் அது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் மீடியா மத்தியில் கடும் விமர்சனங்கள் வரும் என்பதால் அதற்கு உதவ தமிழக அரசும் முன்வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.





