பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். இவர் முதலில் தனியார் தொலைக்காட்சியில், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது குறும்படங்களை இயக்கி நடுவர்களை கவர்ந்த அவர், அங்கிருந்து வெள்ளித்திரையில் இயக்குனரானார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அவர் எடுத்த குறும்படம் தான், வெள்ளித்திரையில் பண்ணையாரும் பத்மினியாக ஜொலித்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு, விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். இதில் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
சாதாரண கதை தான் என்றாலும், அதில் தனக்கான சின்ன சின்ன எலமெண்ட்களை அவர் வைத்திருந்ததால் திரைக்கதை ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இந்த திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கும், நல்ல பெயரை இந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்னும் திரைப்படத்தை அருண்குமார் எடுத்தார். ஆனால் இது வெற்றி பெறவில்லை. பிறகு தனது இயக்கத்திற்கு ஒரு இடைவெளி விட்டு அவர், அடுத்ததாக சித்தார்த்துடன் இணைந்து சித்தா திரைப்படத்தை கொடுத்தார். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் இது ஒன்று என்று கூறலாம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி பேசிய இந்த திரைப்படம், அருமையான விமர்சனத்தை பெற்றது. அது மட்டுமல்லாமல் அருண்குமாருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் சியான் விக்ரமுடன் இணைந்து இருக்கிறார்..
இதில் மளிகை கடைக்காரராக விக்ரம் நடிக்கிறார். ஏற்கனவே படம் குறித்த அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது டைட்டிலுக்கான அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. படத்திற்கு வீர சூர தீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் இரண்டாம் பாகம் தான் இப்போது எடுக்கப்படுகிறதாம்.





