விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன், அதே வழக்கமான நிகழ்வுகளுடன் கடந்த ஞாயிறு அன்று துவங்கி இருக்கிறது. வழக்கம்போல, இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கடந்த 1ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சியில், மொத்தம் 18 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். இதில் எழுத்தாளர் பவா செல்லத்துரை, பாடகர் யுகேந்திரன், நடிகை விசித்ரா உள்பட டிவி நடிகர், நடிகைகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை பொருத்த வரை, வழக்கமாக ஒரு வீட்டில்தான் 100 நாட்களும் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். இந்த முறை. போட்டியாளர்கள் 2 வீடுகளில் தங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பதிய விதிமுறைகளை பிக்பாஸ் அமல்படுத்தி வரும் நிலையில், நிகழ்ச்சி துவங்கிய சில தினங்களிலேயே வீட்டுக்குள் முட்டல், மோதல், களேபரங்கள் ஆரம்பமாகி விட்டன.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் பாடகர் யுகேந்திரன், பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். மலேசியா வாசுதேவன், இளையராஜா, கங்கை அமரன், எஸ்.பி பாலசுப்ரமணியம் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பும், நட்பும் வைத்திருந்தார். ஆனால், மலேசியா வாசுதேவன் மறைந்து விட்டாலும், அவர்களது குடும்ப நட்பு இன்னும் தொடர்கிறது.
அந்த அடிப்படையில், பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரனுடன், எஸ்.பி பாலசுப்ரமணியம் மகன் எஸ்பிபி சரண் மற்றும் கங்கை அமரனின் மகன் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறிய வயதில் இருந்தே நண்பர்களாக உள்ளனர். இப்போதும் அந்த நட்பு நீடித்து வருகிறது. அவர்களுக்குள் எந்த விஷயமாக இருந்தாலும் நட்பு ரீதியாக ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்கின்றனர். இது எல்லா நண்பர்களுக்குள் நடக்கும் இயல்பான ஒன்றுதான்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள தனது கணவர் யுகேந்திரன் குறித்து, அவரது மனைவி மாலினி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். மாலினி கூறுகையில், மலேசியா வாசுதேவன் என்ற பெரிய பாடகர், ஒரு லெஜண்டாக மதிக்கப்படுகிறார். அவரது மகன் என்ற போது, யுகேந்திரன் மீது பெரிய எதிர்பார்ப்பு பலருக்கு ஏற்படுகிறது. அதுவே, அவரது பாதிப்பாகிறது. இதுவே, அவர் சாதாரணமானவராக இருந்திருந்தால், அவரது வெற்றியை பன்மடங்கு மக்கள் கொண்டாடி இருப்பர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது குறித்து, அவரது நெருங்கிய நண்பர்கள் 2 பேர் வெங்கட்பிரபு, சரண் ஆகியோரிடம் யுகேந்திரன் பேசினார். அதற்கு வெங்கட்பிரபு, இது தேவையில்ல மச்சி, என்று கூறியிருக்கிறார். சரண், இது வேண்டாம், எதற்கும் உன் மனைவியிடம் டிஸ்கஸ் செய்துவிட்டு முடிவெடு என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தாக்கு பிடித்தாலே அது பெரிய விஷயம் என்று கூறியிருக்கிறார் பாடகர் யுகேந்திரன் மனைவி மாலினி.





