பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பற்றி பார்க்கலாம். ராக்கி சாணி காகிதம் என இரண்டு ஆக்சன் டார்க் படங்களை கொடுத்த அருண் மாதேஸ்வரன் தான் இதன் இயக்குனர். சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சந்திப் கிஷன், சிவராஜ் குமார் உள்ளிட்டோருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை அருண் மாதேஸ்வரன் கொடுத்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கேப்டன் மில்லர் வெளியாகி இருக்கிறது. இதன் முதல் பாதியின் காட்சிகள் மெதுவாகவே நகர்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
காட்சிகள் ஒவ்வொன்றும் மெல்ல நகர்ந்து, வேகத்தை கொடுப்பதாகவும், இடைவெளி காட்சி நன்றாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போதும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் மிக சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அருண்மாதேஸ்வரனின் முந்தைய திரைப்படங்கள் போலவே மெதுவாகவே இதன் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அயலான் திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்தான் இதனை இயக்கி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கிய நிலையில் பொருளாதார பிரச்சினை காரணமாக அயலான் முடங்கியது. ஏலியன் கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.
அயலான் திரைப்படம் தொடங்கிய சில காட்சிகள் வரை மெதுவாகவே நகர்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். எப்போது ஏலியன் திரைப்படத்திற்குள் வந்ததோ அதன் பிறகு காட்சியில் ஒரு பரபரப்பு இருப்பதாகவும், முதல் பாதி முழுவதும் நகைச்சுவை, ஏலியன் கதாபாத்திரம் என அசர வைத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வி எப் எக்ஸ் பணிகள் எதுவும் உறுத்தாமல் இருப்பதாகவும், முதல் பாதிக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இரண்டாம் பாதியில், நகைச்சுவை மட்டும் என்டர்டைன்மெண்டை பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில், முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு சின்ன சறுக்கல் படத்தில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அயலான், பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாகவும் கூறினர். பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மிஷன் சாப்டர் படமும் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் முதன்முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் திரைப்படமும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு நன்றாக விமர்சனத்தை பெற்று வருகிறது.





