நடிகர் சிலம்பரசன், திரைப்பட அஷ்டவதானி டி ராஜேந்தரின் மகன். புலிக்கு பிறந்தது புலிதான் என்பதை போல, தந்தையை போல மகனும் கலைத்துறையில் கில்லாடியாக சாதித்து வருகிறார். என்றாலும், சில ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் வௌிவந்த மாநாடு படம், ஓரளவுக்கு சிம்புக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் அடுத்து வந்த வெந்து தணிந்தது காடு, பத்துதல போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் எடுபடாமல் போய் விட்டது. அதற்கு முந்தைய படங்களான ஈஸ்வரன், செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜா வாதான் வருவேன் போன்ற படங்களும் பேசும்படியாக இல்லாமல் போனது.
இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை தந்துவரும் சிம்புவுக்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு அமைந்தது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படம் வேற மாதிரியான ஒரு கதைக்களத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கும் மிக முக்கியமான படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஆனால் கடந்த ஓராண்டாக இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துவரும் நிலையில், படப்பிடிப்பு துவங்கியதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. ஒரு கட்டத்தில் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும தகவல் பரவியது. ஆனால் ராஜ்கமல் பட நிறுவனமே, தங்களது அலுவலக்ததின் ஒரு பகுதியில் விஎப்எக்ஸ் பணிகளை, அதுசம்பந்தப்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்து மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
கடந்த 2ம் தேதி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதாவது இரண்டு சிம்புகள் எதிரெதிரே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த அந்த ஸ்டில் பெரிய அளவில் வைரலாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த பர்ஸ்ட் லுக் வெளியிட்ட சில மணித்துளிகளில், விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட, சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காணாமல் போய் விட்டது.
இந்த சூழலில், இப்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் ஒரு திருநங்கை வேடத்தில்தான் நடிக்கிறார். திருநங்கை கேரக்டருக்காக தான் அவர், நீண்ட முடி வளர்த்தும், திருநங்கைக்கு உரிய உடல் மொழிகளை, சைகைகளை தீவிரமாக பயிற்சி எடுத்து கற்றுக்கொண்டு இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. திருநங்கை தோற்றத்தில் சிம்புவை பார்க்க, அவரது ரசிகர்கள் இப்போதே மிக ஆர்வமாக இருக்கின்றனர்.





