தளபதி விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் அவ்வபோது ஈடுபட்டு வந்தார். தனது நற்பணி இயக்கம் மூலம் பல்வேறு சமூக நலத் திட்டங்களில் அவர் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். விஜயும் தளபதி மக்கள் இயக்கத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்து வந்தார்.
கடந்த ஆண்டு பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார் விஜய். கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்று அவர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதே போல் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். இதற்காக நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இப்படி கடந்த சில நாட்களாக செய்திகளில் வலம் வந்த விஜய், அரசியலில் இறங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவனின் வாழ்க்கை கொண்டு பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அரசியல் தனக்கு பொழுதுபோக்கு அல்ல என்றும் புனிதம் என்றும் பேசி இருந்தார் விஜய்.
மேலும் அரசியலில் ஆழம் மட்டும் அல்ல நீள, அகலத்தையும் எமது முன்னோர்கள் வழி நின்று பார்த்திருப்பதாக விஜய் கூறினார். மேலும் தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் படத்துடன் அவர் திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இப்படியான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவ்வபோது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உறுப்பினர் சேர்க்கைக்கான அணியையும் விஜய் ஆரம்பித்தார். அதில் பெண்கள் தலைமையில் அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முதல் வீடியோவை விஜய் வெளியிட்டு இருக்கிறார். அதில் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கும் தளபதி, அதில் இளைஞர்கள் சேர அழைப்பு விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்ல செயலி தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே 20 லட்சம் பேர் அதில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





