நடிகர் தனுஷ், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன். செல்வராகவனின் தம்பி என்பது மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற பெருமையும் கொண்டவர். முதலில் ஒல்லிப்பிச்சான் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், பிறகு தனது திறமையால், உழைப்பால் முன்னுக்கு வந்தவர். இப்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் தனுஷ் மிக முக்கியமானவர்.
கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரது திருமணமும் இருவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் மிக விமரிசையாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு தனுஷ் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இடையில் தனுஷை கதாநாயகனாக வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கினார். பிறகு வை ராஜா வை என்ற படத்தையும் டைரக்ட் செய்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக அவர்களது திருமண வாழ்க்கை நல்லமுறையில், சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால் திடீரென கடந்த 2022ம் ஆண்டில் இருவருமே டிவிட்டரில் ஒரு அதிரடியான பதிவு செய்தனர். அதில் நாங்கள் இருவரும் மனம் ஒத்த நிலையில் பிரிகிறோம், என்று அறிவித்து இருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கஸ்தூரிராஜா இரு தரப்பு குடும்பத்தினருமே எதிர்பார்க்காத இந்த திடீர் அறிவிப்பு, அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ரஜினி, தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரிய கவலையை ஏற்படுத்தியது. திரையுலகம் சார்ந்த பலரும் தனுஷ், ஐஸ்வர்யா முடிவு குறித்து ஆச்சரியப்பட்டனர்,
எனினும் 2 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். தனுஷூம் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அப்பா, அம்மா இருவரிடமுமே யாத்ரா, லிங்கா இருந்து வந்தனர். அதனால் விரைவில் அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு மீண்டும் இணைந்து விடுவார்கள் என எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் மருமகன் என்ற உறவை தனுஷ் இனி இழந்து விடுவாரே, அவரது 2 மகன்களின் எதிர்காலம் என்ன என்பது குறித்தும் புலம்பி வருகின்றனர்.





