தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், இப்போது 73 வயதான போதிலும் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஜெயிலர் படம் தந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்து, வேட்டையன் என்ற அவரது படம் ரிலீஸாக காத்திருக்கிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இப்போது நடித்து வருகிறார். அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதில் சிறப்பு என்னவென்றால், இதுவரை ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஆனால் ஜெயிலர் படத்தில் மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதிக்க காரணம், அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பும், அசகாய சூரத்தனமான வசூலும்தான். படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் விருப்பத்தையும் இதில் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.
ரஜினிகாந்தை பொருத்த வரை உடல் நலம், மனநலம் போன்றவற்றில் அதிக ஆர்வம் அக்கறையும் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் புகை பிடிப்பது, மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் தீவிரம் காட்டிய அவர் சிறுநீரக பாதிப்புக்கு பிறகு தனது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக அவர் உணவு விஷயத்தில் கூட மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் ஒரு நேரத்தில் தானே வம்பை விலை கொடுத்து வாங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. அது, ரஜினிகாந்த் அளித்த பழைய பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகிறது. நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு, பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, ஒருமுறை நானும் என் மனைவியும் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தோம். அங்கு திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மிகவும் சூப்பராக இருந்தது. அந்த சுவை மிகவும் எங்களுக்கு பிடித்துப் போனது. உடனே யார் சமையல்காரர் என விசாரித்தோம். அவர் பெயர் நாராயணன். அவரை எங்கள் வீட்டில் வந்து சமைப்பீர்களா என கேட்டதற்கு அவரும் சம்மதித்தார். அதன்பிறகு அவரே எங்கள் வீட்டில் வந்து சமைக்கவும் ஆரம்பித்தார்.
வீட்டில் அவரது சமையல் மிகவும் சூப்பராக இருந்தது. தினமும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம். ஆனால் எனக்கு பிபி அதிகரித்துக்கொண்டே போனது. அப்போது வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் சாப்பிட்டுவிட்டு, எப்படி இவ்வளவு எண்ணெய், உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார், அப்போதுதான் அதிக உப்பு, எண்ணெய் உணவால் எனக்கு பிபி அதிகரித்தது தெரிந்தது. அதன்பிறகு அந்த சமையல்காரரை உடனடியாக நிறுத்தி விட்டோம், என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.





