நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் 1990களில் ஹீரோவாக அறிமுகமானவர். வைகாசி பொறந்தாச்சு இவரது முதல் படம். தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள் படத்தில் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடித்தார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். நடிக்க வந்த ஆரம்பத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்தார்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழியை நிரூபிக்கும் விதமாக, அவரது தந்தை நடிகர் தியாகராஜன் போலவே பிரசாந்த் நடிப்பில் முன்னிலைக்கு வந்தார். 1980களில் தீச்சட்டி கோவிந்தன், மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன் என பல வெற்றிப் படங்களில் நடித்து பெயர் வாங்கியவர் தியாகராஜன்.
தன் தந்தை தியாகராஜனை போலவே பிரசாந்தும் ஒரு கட்டத்தில் டாப் ஸ்டார் நடிகராக மாறினார். அதற்கு முக்கிய காரணம், நடிகர் பிரசாந்தை நடிகர் தியாகராஜன்தான் வழிநடத்தினார். அவர்தான் இயக்குனர்கள் சொன்ன கதையை கேட்டு ஓகே செய்தார். நல்ல கதைகளை, கேரக்டர்களை பிரசாந்துக்கு தேர்வு செய்து கொடுத்தார், கால்ஷீட்டுகளை கவனித்துக்கொண்டார்.
இப்படி தந்தை தியாகராஜன் வழிகாட்டுதலால் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், செந்தமிழ் செல்வன், ராசாமகன், ஆணழகன் என பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவால், பல ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கிய நிலையில், இப்போது அந்தகன் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆன அந்தகன் படம் 25 நாட்களாகியும் இன்னும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று 70 சதவீத தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங் 100 சதவீதம் நடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக அந்தகன் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையே ஆகஸ்ட் 15ம் தேதி விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள், கடந்த 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை என 3 படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையிலும், அந்தகன் படம் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்து வருவது, லேட்டா வந்தாலும் இப்பவும் நான் டாப் ஸ்டார்தான் என பிரசாந்த் நிரூபித்துள்ளதை காட்டுகிறது.





