நடிகர் தனுஷ் நல்ல நடிகராக முதலில் ரசிகர்களை கவர்ந்தார். பல படங்களில் அவரே சொந்தமான குரலில் பாடியும் ரசிகர்களை அசத்தினார். அதன்பிறகு சில படங்களை அவரே தயாரிக்கும் ஆரம்பித்தார். இப்போது நடிகர் தனுஷ் இயக்குனராகவும் மாறிவிட்டார்.
அவர் இயக்கிய முதல் படம் ப பாண்டி. பவர் பாண்டி என்ற கேரக்டரில் படத்தில் நடிகர் ராஜ்கிரண் அவரது முதுமை கால தோழியாக ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். ப பாண்டி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு நடிகர் தனுஷ் இரண்டாவது டைரக்ட் செய்த படம் ராயன். இது அவரது ஐம்பதாவது படம்.
ராயன் படத்தில் நடித்து இயக்கியிருந்த நடிகர் தனுஷ். மிகப்பெரிய வெற்றியை பெற்றார். 2 மாதங்களுக்கு முன் வெளியான ராயன் படம் ரூ. 155 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். வன்முறை படம் என பலர் விமர்சித்தாலும் படத்தின் கதையும் குறிப்பாக தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசை பெரிய வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
ராயன் படத்தை தொடர்ந்து 3வது படமாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இப்போது நடிகர் தனுஷ் 4வது படம் டைரக்ட் செய்கிறார். தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களாக தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த ஒரு பாடல் இப்போது தேனியில் படமாக்கப்பட்டு வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படத்துக்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். ஆனால் இட்லி கடை என்ற இந்த பெயர் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிச்சயமாக படத்தின் பேரிலேயே இவ்வளவு பெரிய ஒரு ஜனரஞ்சகத்தை கொண்டு வந்திருக்கும் நடிகர் தனுஷ் படத்தை வேற லெவலில் தருவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்தவர். இவரது நடிப்பில் விரைவில் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் திரைக்கு வர இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.





