தமிழ் சினிமாவில் நடிகர் நெப்போலியன் பல வெற்றி படங்களில் நடித்தவர். பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான அவர், எஜமான் படத்தில் வல்லவராயன் என்ற கேரக்டரில் ரஜினிக்கு வில்லனாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன் பிறகு திமுகவில் இணைந்து எம்பி ஆகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷூக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோய்க்கு சிகிச்சை செய்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். பின்னர் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. மிகப் பெரிய ஒரு செல்வந்தராக அங்கு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
நடிகர் நெப்போலியன், தனது மகனுக்கு தனுஷூக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. ஆனால் தசை சிதை நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு எதற்காக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறோம். ஒரு வருடமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு, ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் தந்து ஒரு மாத பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்களது வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடைய பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும் பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ்ந்தாக வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறைதான் அதை வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்.
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். எங்களைப் போன்று உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஒரு சொல், ஒரு யானை பலம் தரும். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். ஏனென்றால் அது ஒருநாள் உங்களுக்கே திரும்பி வரும். எண்ணம் போல் வாழ்க்கை. அதனால் சிந்தித்து செயல்படுங்கள் என்று நடிகர் நெப்போலியன் அந்த பதிவில் சற்று கோபமாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





